புதன், 28 ஆகஸ்ட், 2013

ஈரநெஞ்சம் மகேந்திரன் குறித்த வ.மு.முரளியின் கட்டுரை

அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தினத் திருவிழாவில் அறச்செம்மல் விருது பெற்ற திரு.கோவை ஈரநெஞ்சம் மகேந்திரன் குறித்த பத்திரிகையாளர் திரு. வமுமுரளியின் கட்டுரை இது....

 ***

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.


மதுரை
யைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
eeranenjam07
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
- தினமணி- ஞாயிறு கொண்டாட்டம் (30.06.2013)
தொடர்புக்கு:  
P.மகேந்திரன்,
நிர்வாக அறங்காவலர்,
ஈரநெஞ்சம் (பதிவு எண்: BK4 193/2012)
406, ஏழாவது வீதி, காந்திபுரம்,
கோயம்புத்தூர்- 641 012.
.
அலைபேசி: 90801 31500
மின்னஞ்சல்: eeram.magi@gmail.com
இணையதளம்: http://www.eeranenjam.org


.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

காந்தீயவாதி சசிபெருமாள் குறித்து மருத்துவர் சுனில்....

என் உயிரைப் பத்தி அக்கறை எடுத்துகிட்ட அளவுக்கு என்னுடைய கோரிக்கையைப் பற்றி அக்கறை எடுத்துக்கல: சசி பெருமாள் – ஒரு நேர்காணல்

 ஒருசில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வழியாக நாமறிந்த ஆளுமைதான் காந்தியர் அய்யா திரு. சசி பெருமாள். தமிழகத்திலும் இந்தியாவிலும் பூரண மதுவிலக்கு கோரி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார் அவர். முப்பத்தி மூன்று நாட்கள் தொடர்ந்து நீடித்த அவருடைய இந்த உண்ணாவிரதம் பரவலான கவனத்தை அவர் மீதும் அவர் முன்வைத்த கோரிக்கை மீதும் ஏற்படுத்தியது. அரசு அவருடைய கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. அவருடைய உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அளவிலான சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரும் போராட்டத்தைக் கைவிட்டு மாற்று வழிகளைச் சிந்திக்குமாறு கோரியதன் விளைவாக அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
சசி பெருமாள் 
அண்மையில் திருப்பூரில் நடைபெற்ற அறம் அறக்கட்டளை விருதுகள் விழா வழங்கும் நிகழ்வில் அவருக்கு அறச்செம்மல் விருது வழங்கி கவுரவம் செய்யப்பட்டது. அங்குதான் அவரை முதன்முறையாக நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது. வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் வெள்ளை நிற காந்தி குல்லாவும் அணிந்து நாற்காலி வரிசையொன்றின் மூலையில் அமர்ந்திருந்தார்.
.
அவரைப் பார்க்கையில் ஏதோ ஒரு பழைய யுகத்து மனிதர் வழிதவறி வந்தமர்ந்துவிட்டதாகத் தோன்றக்கூடும். பீட்டர் கோன்சால்ஸ், காந்தி எப்படி காதியை தேசிய போராட்டத்தின் சின்னமாக மாற்றினார் என்று எழுதியது நினைவுக்கு வந்தது. கோட்டும் சூட்டும் அணிந்த தலைவர்கள் கௌபீனம் அணிந்த அந்தக் கிழவரின் பேச்சை கேட்க மணிக்கணக்கில் காத்திருந்த காலமுண்டு.  தன் சுயத்தைத் தொலைத்து அதை காலனியாதிக்க குறியீடுகளுடன் தொடர்புபடுத்தி தங்களையும் அதில் இணைத்துக் கொள்வதைப் பெருமையாக கருதிய காலகட்டத்தில் அதற்கு மாறாக, ஒடுக்குமுறைக்கு எதிரான, ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக காந்தி எழுந்து நின்றார், அவருடன் தேசமும் எழுந்து நின்றது. ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமாகத் திகழ்ந்த கதரும் வெள்ளுடையும் இன்று அராஜக அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக மாறிவிட்டது. இன்று தமிழகத்தில் இத்தகைய உடையும் தொப்பியும் கேலிப் பொருளாகிவிட்டது. 
.
தயங்கி நின்ற என்னை  நண்பர் ஒருவர் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் விழா அரங்கின் சலசலப்புகளுக்கிடையில் சுமார் அரைமணி நேரம் அவருடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தேன்.
.
57 வயதாகும் காந்தியவாதி அய்யா சசி பெருமாள் அவர்கள் காந்தியின் மரணத்திற்கு பின்னர் பிறந்த தலைமுறையை சேர்ந்தவர். நேரடியாக காந்தியைக் கண்டதில்லை என்றாலும், அவரை ஆதர்சமாகக் கொண்டு வளர்ந்த தலைமுறை அது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர். இன்றும் அவர்கள் குடும்பம் அவருடைய சொந்த கிராமத்தில் வேளாண்மை செய்துவருகிறார்கள். அக்குப்ரஷர் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளில் ஆர்வம் கொண்டவர். இன்றும் தன்னைத் தேடி வரும் நெருங்கிய நண்பர்களுக்கு அம்மருத்துவ முறைகள் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருவதாகச் சொன்னார்.
.
ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே சுயசரிதை வழியாக காந்தி அவருக்கு அறிமுகமாகிறார். அதன் பின்னர் அவருடைய பதினெட்டாவது வயதில், அதுவரை தமிழகத்தில் நிலவி வந்த மதுவிலக்கு முடிவுக்கு வந்தது. அந்நாளைய தி.மு.க அரசால் தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு ஐந்து நாட்கள் சிறை சென்ற அனுபவத்தை நினைவு கூர்ந்தார். 
.
பெரியாரும், ராஜாஜியும், காமராஜரும் எத்தனையோ முறை வலியுறுத்தியும்கூட அன்றைய அரசாங்கம் கள்ளுக்கடைகளை திறந்து வைத்ததன் வழியாகவே மது இன்று இத்தனைப் பிரம்மாண்டமான அச்சுறுத்தும் உருப்பெற்றிருப்பதாக அவர் சொன்னார். ராஜாஜி அடைமழையில் குடை பிடித்துக்கொண்டு அன்றைய முதல்வரின் வீடேறி இத்திட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டதைக்கூட அக்கட்சியின் முதல்வர் பொருட்படுத்தவில்லை என்பதில் அவருக்கு இன்றும்கூட வருத்தமுண்டு. 
.
அய்யா சசி பெருமாளும் சக காந்தியர்களும் தொடர்ந்து ஒரு குழுவாக இணைந்து மதுவுக்கு எதிராகப் போராடிவந்தனர். டாஸ்மாக் வாயிலில் நின்று மது அருந்த வருவோரின் காலில் விழுந்து குடிக்க வேண்டாம் எனக் கேட்டுகொள்வது அவர்களுடைய போராட்ட வழிமுறையாக இருந்தது. இதே வழிமுறையைப் பின்பற்றிய டாக்டர் பிரான்சிஸ் ஆசாத் காந்தி எனும் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களுடனான உரையாடல் கொஞ்ச காலத்திற்கு முன்னர் இத்தளத்தில் வலையேற்றப்பட்டது நினைவிருக்கலாம். (அவரும் இதே குழுவை சேர்ந்தவர்தான்). இளமை தொட்டே மதுவிலக்கு பிரசார கவிதைகள், நாடகங்கள் என பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார்.    
.
சென்னையில் அவர் உண்ணாவிரதமிருந்த கதையை சுவாரசியமாகச் சொன்னார். உண்ணாவிரதம் தொடங்கிய பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கும் அவருடைய உண்ணாவிரதம் தொடர்கிறது. அதன் பின்னர் மருத்துவ கண்காணிப்பிற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கும் எதையும் உட்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார். மவுன விரதத்தையும் கடைபிடிக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுகிறார். சிறையில் அவருடைய இருப்பு பிற கைதிகளின் ‘இன்ன பிற சுதந்திரங்களுக்கு’ வினையாகிறது. ஆகவே அவரை சிறையிலேயே கொல்வதற்கு சதி நடக்கிறது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்படுகிறார். 
.
விடுதலைக்குப் பின்னர் நெல்லை ஜெபமணியின் இல்லத்தில் தன் உண்ணாநோன்பைத் தொடர்கிறார். இவரை அங்கிருந்து வெளியேற்ற பல மட்டங்களிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்தார். உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த இல்லத்தின் உரிமையாளர் அவர் வீட்டிலிருந்து வெளியேற மறுப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்ததாகச் சொல்லப்பட்டது. அகில இந்திய அளவில் மதுவுக்கு எதிராகப் போராடிவரும் சமூக ஆர்வலர்கள் உண்ணா நோன்பை கைவிடும்படி அவருக்கு அறிவுறுத்தினார்கள். தனியொரு மனிதனாக இல்லாமல், இந்திய அளவில் இதே கோரிக்கையை வலியுறுத்தும் இயக்கங்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பதே சரியான பாதை என அவர்கள் அறிவுறுத்தியதால் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு இப்போது களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 'என் உயிரைப் பத்தி அக்கறை எடுத்துகிட்ட அளவுக்கு என்னுடைய கோரிக்கையைப் பற்றி அக்கறை எடுத்துக்கல' என்றார் வருத்தத்துடன்.  
.
சசி பெருமாள் அய்யா தன் உண்ணாவிரதத்தை ஒரு சபதத்துடன்தான் முடித்திருக்கிறார். ஜனவரி முப்பது, 2014-க்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரவில்லை என்றால் மீண்டும் சாகும்வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக தெரிவித்தார். இடைபட்ட இந்த ஒருவருட காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வதே தனது திட்டம் என்றார். இதுவரை சுமார் ஏழெட்டு மாவட்டங்களுக்கு பயணமாகியிருக்கிறார். 
.
அவருடைய கோரிக்கைக்கு ஆதரவு எப்படி இருக்கிறது எனக் கேட்டபோது, “போற எல்லா இடத்துலயும் நல்ல ஆதரவு. இப்ப இங்க வரதுக்கு முன்ன, மைலாப்பூர்ல ஒரு டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டுட்டுதான் வர்றேன். அடிப்படையில என்னன்னா, அந்தப் பகுதி மக்கள், குறிப்பா பெண்களை ஒன்று திரட்ட முடிஞ்சா போதும், எல்லா இடத்துலயும் பெண்கள் மதுவிலக்குக்கு அமோக ஆதரவு கொடுக்குறாங்க..ஒரு முன்னூறு நானூறு பெண்கள் சேர்ந்து போராட்டம் நடத்துனாங்க, என்னையும் அழைச்சிருந்தாங்க. அந்த டாஸ்மாக் கடைய எடுப்போம்னு உறுதி கொடுத்தாத்தான் நகருவோம்னு சொல்லிட்டோம். அப்புறம் ஒரு உயரதிகாரி வந்தார். இன்னும் சில நாட்களுக்குள் மூடுவதா உறுதியளிச்சார். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார் அய்யா.
.
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் முகமாக அவருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் சசி பெருமாள் அய்யா. அண்மைய உயர்நீதிமன்ற தீர்ப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இருக்க வேண்டாம் என்றால் அரசு அதை மூட வேண்டும் என அது வழிக்காட்டுதல் அளிக்கிறது. டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்க அரசு தரப்பு சொல்லத்தகுந்த ஒரே காரணம் – அது லாபத்தை பெருக்குகிறது என்பதாகும். ஆயுதமேந்திய காவலர்களின் பாதுக்காப்புடன் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை நடத்த முயன்ற அரசை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதிலுள்ள அறமின்மை ஒரு அரசை நியாயமாக கூசச் செய்ய வேண்டும். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனும் ஆணையைப் பின்பற்றுவதில் அரசு வெற்றி கண்டுள்ளது.
.
“உண்மையிலேயே நீங்க எதிர்பாக்குற பூரண மதுவிலக்கை இந்த அரசு கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா?” என அவரிடம் கேட்டேன்.
.
“இல்லை. கொண்டு வராது அப்படின்னு தெரியும். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குமே மது ஆலைகள் இருக்கின்றன, அந்த ஆலைகள்தான் டாஸ்மாக்கிற்கு மது விற்பனை செய்கின்றன. இந்தச் சூழலில் இவர்கள் இதை அமல்படுத்துவார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் தி.மு.க – அ.தி.மு.க அல்லாமல் பதினெட்டு கட்சிகள் பூரண மதுவிலக்கிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்களாகவே உள்ளனர். இருபத்தியொரு மக்கள் அமைப்புகளும் எங்களுடன் கைகோர்த்திருக்கிறார்கள்”.
.
அப்படியென்றால் என்னதான் வழி? அண்மைய உயர்நீதிமன்ற தீர்ப்பும், இந்த மைலாப்பூர் போராட்டமும் நமக்கொரு வழியைத் திறந்துவிடுவதாகத் தோன்றியது. தொடர் பிரச்சாரம் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி டாஸ்மாக் கடைகளை வேண்டாம் என மக்களை, குறிப்பாக பெண்களை ஒன்று திரட்டிப்  போராட செய்ய வேண்டும். பரவலான மக்கள் எதிர்ப்பை அப்பகுதியில் ஒருங்கிணைக்க முடிந்தால், அரசுக்கு செவி சாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு தொடர் போராட்டங்களும் விழிப்புணர்வும் தேவையாகிறது. அப்படி மதுவுக்கு எதிராக ஒலிக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானதே.
.
அய்யா சசி பெருமாள் அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உடல்நலத்திற்கும் கேடு அப்டின்னு நீங்கதானே போடுறீங்க? அப்புறம் எதுக்கு முக்குக்கு முக்கு டாஸ்மாக் திறந்து வைக்கணும்? மது ஒழிப்புக்கு ஒதுக்கப்படுற நிதியையும் பயன்படுத்திக்கிட்டு மதுக்கடையையும் திறந்தா எப்படி? அதிகாரிங்களோட பொறுப்பின்மையைத்தான் காட்டுது. இந்த மாதிரி தவறான திட்டங்களைப் பற்றி அரசுக்கு எடுத்துச் சொல்லணும். ஆனா அவுங்கதான் திரும்பத் திரும்ப லாபம் தருது லாபம் தருதுன்னு இதை மூடவிட மாட்டேங்கறாங்க. அதிகாரிங்க மட்டத்துல குடி ரொம்பவே செல்வாக்கோட இருக்கு. என்ன ஐ.ஏ.எஸ் படிச்சு என்ன பிரயோஜனம்? இப்ப எனக்கு என்ன சந்தேகம்னா வருஷத்துக்கு பதினஞ்சாயிரம் இருபதாயிரம் லாபம் வர்ரதாவே இருக்கட்டும். இதைக் குடிச்சு உடம்ப கெடுத்துக்கறவனோட மருத்துவ செலவு எவ்வளவு? அவன் மரணத்தினாலயோ இல்ல உடலநலக் கேடாலயோ அவனுடைய குடும்பமும் அது வழியா இந்த சமூகமும் தேசமும் எவ்வளோ இழக்குது? அதோட அளவு என்ன? குடிச்சுட்டு வண்டி ஓட்டுறதுனால வர்ற விபத்துக்கள் எவ்வளவு? அதனால வர்ற உயிரிழப்புகள் எவ்வளவு? அவுங்களால வர்ற பொருளாதார பின்னடைவு எவ்வளவு? நிச்சயமா இதைச் சொல்லலாம் - குடி நமக்கு இருபதாயிரம் லாபம் தருதுன்னா அதவிட நாலு மடங்கு பொருளாதார ரீதியா நட்டம் தருது. இதையெல்லாம் அதிகாரிங்கதான் அரசுக்கு எடுத்துச் சொல்லணும்”
.
காந்தி இந்தியாவை கிராமங்களின் தொகுப்பாகவே தரிசித்தார். வேளாண்மையும் அதைச் சுற்றிய தன்னிறைவான வாழ்க்கையுமே இந்தியாவிற்கு உகந்தது என அவர் கண்டடைந்தார். ஒரு கிராமத்து சமூகத்தின் வேர்களை அழிப்பது எவை? தீண்டாமை, மது ஆகியவற்றைச் சொல்லலாம். ஆகவே காந்தி அவற்றுக்கு எதிராகப் போராடினார். இன்று விளைநிலங்கள் எல்லாம் கட்டாந்தரையாகி அவற்றில் வண்ண வண்ண கொடிகள் பறக்கின்றன. பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், கள்ளச் சந்தையில் சாராயம் விற்கப்படும், அண்டைய மாநிலங்களில் அமல்படுத்தாததால் பலனின்றி போகும் போன்ற வாதங்களை ஏற்க முடியவில்லை. உண்மையில் கடுமையாக கண்காணிக்க முயன்றால் இக்குற்றங்களை நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். படியிறங்கி தெரு முக்கிற்கு சென்றால் குடிக்கலாம் எனும் நிலை மாற வேண்டும். எங்கோ ஒரு மூலையில் திருட்டுத்தனமாக சென்றுதான் குடிக்க முடியும் எனும் நிலைமை வந்தாலே குடியர்களின் சதவிகிதம் பெரும் பங்கு குறையும். எளிதில் கைக்கெட்டிய தொலைவில் கிடைப்பதாலேயே இந்த எண்ணிக்கை நம்மை அச்சுறுத்துகிறது. 
.
எழுத்தாளர் ஜெயமோகனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது சில யோசனைகளைச் சொன்னார். அரைமணி ஒரு மணி என நேரம் குறைப்பதெல்லாம் பெரிய அளவில் பலனளிக்காது என்றார் அவர். பகல்பொழுது முழுவதுமாக அடைத்து வைத்தால் கொஞ்சம் நன்மை ஏற்படும். மேலும் குடிப்பதற்கு பார் அல்லது அத்தகைய எந்த வசதியும் அரசு செய்து தரக்கூடாது. பொது இடங்களிலோ மதுபானக் கடைகளிலோ குடிக்கக்கூடாது எனச் சட்டம் போட்டு கடுமையாகக் கண்காணித்தால் குடியர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும். காரணம், பெரும்பாலும் மனைவிக்கோ அல்லது பெற்றோருக்கோ  தெரியாமல்தான் பலரும் குடிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குடியடிமை நிலையை எட்டியிராத ஐம்பது சதவிகிதம் பேரையாவது மதுவிலக்கு மீட்டு எடுக்கும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.
.
மேடையில் அழைக்க இருந்ததால் உரையாடலை முடித்துக் கொண்டோம். அவருடைய காலில் விழுந்து விடைபெற்றேன். செயலூக்கம் கொண்ட மனிதர்களின் அண்மையைப் போல் நமக்கு செயலூக்கம் அளிப்பவை குறைவு. விருது விழாவில் பங்கு பெற்றதற்கு ஏதோ ஒரு வகையில் பலனிருந்தது. பற்றற்ற சமூகச் செயல்பாடுகளில் காந்தி இன்றும் ஒரு அகல் விளக்காக எங்கோ தன்னை ஒளியாக்கிக் கொண்டுதானிருக்கிறார். 
 .
- டாக்டர் சுனில் கருஷ்ணன்
 
 .
 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கல்விக் கருத்தரங்கில் திருமதி சங்கீதா ஸ்ரீராம் உரை

திருப்பூரில் ஆகஸ்ட் 15 அன்று அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தினவிழாவில், மாற்றுக்கல்வி குறித்த கருத்தரங்கில்,  திருமதி சங்கீதா ஸ்ரீராம்  நிகழ்த்திய உரை இது. இதனை அவரது இணையதளத்தில் இருந்து பெற்று இங்கு வெளியிடுகிறோம்.

***

மாற்றுக் கல்வி - திருப்பூர் உரை


அவையோருக்கு வணக்கம். இந்தக் கருத்தரங்கில் கல்வி குறித்த எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழைத்ததற்கு அறம் அறக்கட்டளைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன், எனக்கு மாற்றுக் கல்வியில் உள்ள ஈடுபாடு மற்றும் அதைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி, இவற்றைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். நான் எந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ பணியாற்றியதில்லை. கல்வியாளராகவோ, குழந்தை மனதத்துவ நிபுணராகவோ எந்த முறையான பயிற்சியோ அனுபவமோ எனக்கில்லை. கடந்த 13 ஆண்டுகளாக பல மாற்றுப் பள்ளிக்கூடங்களைச் சென்று பார்த்து அறிந்துகொண்ட அனுபவம்; என்னுடைய உள்ளுணர்வைக் கொண்டு நான் புரிந்து கொண்ட என்னுடைய கடந்த முப்பது ஆண்டுகால-சொந்த வாழ்க்கை அனுபவம் (இதில் பள்ளிக்குச் சென்ற அனுபவமும் அடங்கும்); ஜே. கிருஷ்ணமூர்த்தி, அரபிந்தோ, அன்னை, தாகூர், காந்தி, விவேகானந்தர், வினோபா, ஸ்டைனர், மாண்டெசரி, ஐன்ஸ்டைன், ஜான் ஹோல்ட் போன்ற அறிஞர்களின் ஞானிகளின் எழுத்துக்களைப் படித்திருப்பது; பள்ளிக்குச் செல்லாத எனது நான்கு வயது மகள் இயற்கையாகவே கற்பதைக் கூர்ந்து கவனித்து வரும் இந்த நான்காண்டு நேரடி அனுபவம்; இவை மட்டுமே எனக்கு இருக்கும் தகுதி.


நான் எனது மகளைக் கூட்டிக்கொண்டு பல இடங்களுக்கும் செல்வதால், ஒவ்வொரு நாளும் "இன்னிக்கு ஸ்கூல் லீவா பாப்பா?" என்று தொடங்கி பள்ளியில்லா கல்வியையப் பற்றிப் பல உரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலானோர் சொல்வது "நீங்க சொல்றது சரிதாங்க! இப்பல்லாம் பள்ளிக்கூடங்கள்ல பசங்கள பசங்களா இருக்கவே விடறதில்ல. முதுகுல இத்தன பெரிய மூட்ட; ஹோம் வர்க்; மதிப்பெண் வாங்கணும்கிற பிரஷர்; பரீட்சை சித்திரவதை."


இவர்களில் சிலர் கூடவே ஒரு ஆலோசனையையும் சொல்வார்கள். "ஆனா, இப்போ இதெல்லாம் இல்லாம சில பள்ளிக்கூடங்கள் வந்திருக்காமே! அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் பரீட்சையே இல்லையாம். விளையாட்டு மூலமாவே பாடங்கள சொல்லித் தராங்களாம்! இந்த மாதிரி எதாவது ஒரு பள்ளிக்கூடத்துல உங்கக் குழந்தய சேக்கலாமே?" என்பதுதான் அது. எனது இந்த உரை அவர்களுக்கான பதிலாக அமையும். மூலை முடுக்கிலெல்லாம் முளைத்திருக்கும், குழந்தைகளைக் கைதிகளைப் போல அடைத்து வைக்கும் பள்ளிகளைப் பற்றிய விமர்சனத்தை நான் முன்வைக்கப்போவதில்லை. அது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே. மாற்றுப் பள்ளிகள் என்று சொல்லிக்கொண்டு இயங்கிவரும் பள்ளிகளைப் பற்றிய எனது விமர்சனத்தையும், மாற்றுக் கல்வியும் கல்விக்கூடங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்னும் எனது கற்பனையையும் பற்றிப் பேசப் போகிறேன்.


**


கல்வியை முக்கியமாக இரண்டு கோணங்களில் பார்த்து புரிந்து கொள்ளலாம். வடிவம் - உள்ளடக்கம் (form- content) என்று பார்க்கலாம். அறிவு - திறம் (knowledge - skill) என்று பார்க்கலாம். இந்த இரண்டுமே, உடல்வளம், மனவளம், உள்ளநலம், ஆன்மீகம் என்கிற எல்லா பரிமாணங்களிலும் குழந்தையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.


முதலாவதாக, வடிவம் - உள்ளடக்கம் குறித்த புரிதலுக்கு வருவோம். பாடங்களை எப்படிச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது 'வடிவம்'. என்ன பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது 'உள்ளடக்கம்'. இன்றைய மாற்றுப் பள்ளிகளில் குழந்தைகளை சிரமப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், அன்புடன் விளையாட்டு மூலம் பாடங்களை சொல்லிக்கொடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் விளையாட்டு என்று சொல்வதையே நான் கேள்விக்குட்படுத்துகிறேன். தனியாகவோ கூட்டாகவோ குழந்தைகள் தாங்களாகவே விளையாட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள். இந்த சொந்தமான விளையாட்டுகள்தான் உண்மையிலேயே தங்கள் அறிவை முழுமையாக வளர்க்க உதவும் என்பது எனது கருத்து. கடந்த நான்காண்டுகளாக எனது மகள் தானாகவும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்தும் (பெரியவர்களின் எந்தவிதமான தலையீடுமின்றி) கற்பனை செய்து, உருவாக்கி, விளையாடுவதை மிகுந்த ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்து வருகிறேன். இதில் ஒரு விளையாட்டைப் பார்ப்போம்.


அவள் சட்டையைத் தொங்க விடும் ஹாங்கர்களை ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களாகக் கற்பனை செய்து கொள்வாள். அப்பா-அக்கா, அம்மா-பாப்பா என்று கைகோர்க்கச் செய்து (அதாவது ஹாங்கர்களை ஒன்றோடொன்று மாட்டச்செய்து) எங்கோ இழுத்துக்கொண்டு போவாள். அந்தப் புதிய இடத்தில் அவர்களைக் கொண்டு ஒரு புதிய கதை உருவாகும். இப்படி தினம் தினம் தன்னிச்சையாக உருவாகும் புதிய விளையாட்டுகளின் மூலம், புதிய விஷயங்களை explore செய்வாள். இதில் வீட்டில் கிடக்கும் தட்டு, கரண்டி, குச்சி, தொப்பி, தலையணை, புட்டிகள் அனைத்துமே வெவ்வேறு பொருட்களாகவும், மனிதர்களாகவும், மிருகங்களாகவும், மரங்களாகவும் மாறும். நம்மில் யாராவது இவ்வகையான கற்பனையைச் செய்ய முடியுமா? நாம் எப்படி இவர்களின் மனங்களை அறிந்து கொண்டு இவர்களுக்கான பொம்மைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்க முடியும் என்று எண்ணுகிறோம்?

எனது மகள் சில நாட்கள் ஒரு மாண்டெசரி பள்ளிக்குச் சென்றாள். அங்கு ஒரு நாள் அவள் மற்றும் வேறு இரண்டு குழந்தைகளுக்கு ஒரு கதையைப் படிக்குமாறு அந்த ஆசிரியை என்னைக் கேட்டுக் கொண்டாள். கதையைப் பாதிப் படித்ததும், அதிலுள்ள கவனமும் ஈடுபாடும் மூவருக்குமே குறையத் தொடங்கியது. கதையில் வரும் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறுமி ஒரு விளையாட்டுக்கான யோசனையை சொன்னாள். கதை கேட்பது இயல்பாகவே நின்று அது ஒரு விளையாட்டாக மாறியது. எல்லோரும் கைகோர்த்துக்கொண்டு அவர்கள் கூட்டாக உருவாக்கிய அந்தப் புதிய விளையாட்டுக்கு ஒவ்வொருவராக புதுப்புது விதிமுறைகளை அறிமுகம் செய்தார்கள். "நான் இந்தக் கையைத் தூக்கினால், எல்லோரும் தூக்க வேண்டும்" என்பது போல. சிக்கலான விதிமுறைகளைக் கொண்ட இந்த சுவாரசிமான விளையாட்டில் நாங்கள் நால்வரும் மூழ்கியிருக்கும் சமயத்தில் ஆசிரியையின் குரல் கேட்டது. "இன்னும் 5 நிமிஷத்துல இந்த விளையாட் முடிச்சுட்டு ஒரு learning activity செய்ய வெக்கறீங்களா?". மாண்டெசரி முறையில் தேர்ச்சி பெற்ற மதிக்கப்பெற்ற ஆசிரியை அவர்.

இன்றைய பெரியவர்களுக்கு இருக்கும் விளையாட்டைப் பற்றின புரிதல் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது! "விளையாடினது போதும். படி." என்று குழந்தைகளிடம் உத்தரவிடுவதை நாம் தினம் தினம் எத்தனை முறை கேட்கிறோம். விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு அர்த்தமற்ற செயல், குழந்தைகள் இளைப்பாறுவதற்காக உதவும் ஒன்று, என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில், குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தேவையானதை விளையாட்டு மட்டுமே பெரிய அளவில் செய்து கொடுக்கிறது. ஒவ்வொரு வயது குழந்தையும் தன் வயதுக்கேற்ற மன - மூளை வளர்ச்சிக்குத் தேவையான விளையாட்டைத் தானே உருவாக்கிக்கொள்ளும்.

இது எதைப் போன்றது என்றால், முளைக்கும் ஒரு தானியம், அதன் தொடக்க காலத்தில் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கியபடி உருவாக்கப்படுகின்றது. அது முளை விடும்போது, அந்த ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கப்பெறுமாறு உடைந்து அந்த முதல் இரண்டு இலைகளுக்குப் போய் சேருகின்றன. அதனால்தான் முளைகட்டிய தானியங்களும், பயறுகளும் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. விதையில் பொதிந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தீர்ந்துவிடும் சமயத்தில், அதன் சூழலிலிருந்து சூரிய ஒளி, மண்ணிலிருந்து மற்ற ஊட்டச்சத்துக்கள் ஆகியவை தேவையாகின்றன. மேலும், அந்த இளம் செடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் வெவ்வேறு கனிமங்கள் தேவைப்படுகின்றன. அதை உணர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளும் நுண்ணறிவுடன் தான் இந்தப் பிரபஞ்ச சக்தியால் அது உருவாக்கப்படுகின்றது. ஒரு சிறிய விதையே இத்தனை நுண்ணறிவும் செயல்திறனும் கொண்டுள்ளதென்றால், ஒரு குழந்தை எத்தனை நுண்ணறிவுடன் பிறக்கின்றது என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஆறு மாதக் குழந்தை கண்களை இரு கரங்களால் மூடிக்கொண்டு "காணுமே, இதோ" என்று திறந்து பார்க்கும் விளையாட்டை சளைக்காமல், அதே பூரிப்புடன் நூறு தடவை திரும்பத் திரும்ப விளையாடுவது, அதனுடைய மூளை-மன வளர்ச்சிக்குத் தேவையான ஒரு விளையாட்டு. நான்கு வயது குழந்தை, ஹாங்கர்களை மனிதர்களாக உருவகம் செய்வது, அவளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஒரு விளையாட்டு. மூளையில் புதிய உயிரணு இணைப்புகள் உருவாவதற்கு இந்த விளையாட்டுகள் உதவுகின்றன.

சொல்லிக் கொடுத்து விளையாட வைப்பது ஒரு தேவையற்ற, குழந்தைகளுடைய அறிவுத்திறனை மதிக்காத ஒன்றாகவே எனக்குப் படுகிறது. அதற்கும் மேல், அவர்கள் தாங்களாகவே உருவாக்கும் விளையாட்டுகளில் பெரியவர்கள் தலையிடும் போது, அது அவர்களின் கற்றலைத் தடைகூடச் செய்கிறது. ஆனால், அவர்களை வழிநடத்தச் செய்து அந்த விளையாட்டுகளில் கலந்துகொண்டால், நாமும் கற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு நம்முடன் இருக்கும் இணைப்பும் ஆழமாகும். இது எனது சொந்த அனுபவம்.

மரியா மாண்டெசரி குழந்தைகளின் மனங்களையும் அவர்களின் வளர்ச்சியையும் கூர்ந்து கவனித்து, அதுபற்றி அருமையாக ஆராய்ந்து எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்களிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அவர் உருவாக்கிய educational materials குறிப்பிட்ட கருத்துக்களை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் என்பது உண்மை. ஆனால், அவற்றைக் குழந்தைகள் தாமாக உருவாக்கும் விளையாட்டுடன் சேர்த்து உபயோகிக்கலாமே தவிர, அவற்றுக்கு மாற்றாக ஒருபோதும் அமைய முடியாது என்பது எனது கருத்து.

உயர் வகுப்பு மாணவர்களுக்குக் கூடச் சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் வார்த்தையாகவே தங்கிவிட்டுள்ளது. சில மாற்றுப் பள்ளிக்கூடங்களில் "உங்கள் சொந்த வரிகளில் சரியான விடையளிக்கலாம்." "ஆசிரியர் நடத்தும் பாடம் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக வெளியில் சென்று ஒரு நடை சென்று வரலாம். ஆனால், திரும்பி வந்து பாடங்களை கவனிக்க வேண்டும்." என்பன போன்ற சலுகைகளையெல்லாம் சுதந்திரம் என்னும் பெயரில் கொடுப்பார்களாம். "இந்தக் கேள்வியே எனக்குத் தவறாகத் தோன்றுகிறதே!" அல்லது "எனக்கு இந்த பாடத்தில் சுத்தமாக ஆர்வமே இல்லை! மாறாக, அதோ அங்கே இரும்புக் கதவை வெல்டிங் செய்துகொண்டிருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது! அது எப்படி இரண்டு இரும்புத் துண்டுகளை ஒன்றோடொன்று ஒட்ட வைக்கிறார்கள்?" என்பன போன்ற அவர்களது சொந்த எண்ணங்கள், விருப்பங்கள், கேள்விகளையெல்லாம் சகித்துக் கொள்ளும் பள்ளிக்கூடங்களை நான் ஒன்றிரண்டே கண்டிருக்கிறேன்! பத்து வயது வரை இவற்றுக்கு ஓரளவுக்கு இடம் கொடுத்தாலும் அதன் பிறகு இழுத்துப் பிடித்து ஓட்டப் பந்தயத்தில் ஓடவைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதட்டாமல், மிரட்டாமல்  செல்லமாகப் பேசியே! உயர்ந்த லட்சியங்களுடன் துவங்கும் பள்ளிகள்கூட "என்ன செய்வது? பெற்றோர்கள் இதைத் தானே கேட்கிறார்கள்!' என்று கூறி நுகர்வோரின் தேவைக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, பாடங்களின் உள்ளடக்கத்தில் கூட அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. மனப்பாடம் செய்ய வேண்டிய தகவல்களைக் குறைத்துக்கொண்டு, புரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களை அதிகரித்தாலும், அடிப்படையில் அவை பெரும்பாலும் பிளவுண்ட நவீன சிந்தனா முறையைத்தான் திணிக்கிறது. மாறாக, முழுமை நோக்குடைய இந்திய சிந்தனையை 'பழமையானது, பிற்போக்கானது, அறிவியல் பூர்வமற்றது' என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லிக் கொடுக்கிறது. அறிவியல் என்றால் பிளவுண்ட நவீன அறிவியல்; பொருளியல் என்றாலே மையத்தை நோக்கி பொருளைக் குவிக்கும் நவீன பொருளியல் என்கிறது. மனிதனைக் கூட, அணுக்கள் மற்றும் ரசாயனங்களாலான இயங்கு உறுப்புகளைக் கொண்ட உடலாகக் குறைத்துவிட்டு, அதை பாகம் பாகமாகப் பிளந்து பார்க்கும் நவீன மருத்துவத்தை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறது.

சிறப்புத்துறைக் கல்வி, வாழ்க்கையை நுணுக்கமாக அறிந்து பிரச்சினைகளைக் தீர்க்க உதவும் என்று சொல்லிக்கொடுக்கிறது. நவீன தொழில்நுட்பமயமான சமுதாயம், கல்வியையும் பாடசாலைகளையும் பிரச்சாரக் கூடங்களாக முழுவதுமாக வெற்றிகரமாக மாற்றிவிட்டிருக்கின்றது. இதைப் பற்றி எனது 'பசுமைப் புரட்சியின் கதை' புத்தகத்தில் குறிப்பிட்ட உதாரணங்களுடன் விரிவாகவே எழுதியிருக்கிறேன். இந்த வகைக் கல்வி, மனித மனங்களில் இரைச்சலைத் தான் அதிகமாக்குகின்றது!

*

இரண்டாவதாக, அறிவு - செயல்திறன் குறித்த புரிதலுக்கு வருவோம். இன்று பள்ளிக்கூடங்கள் சிறப்பாகச் செய்வதெல்லாம் முதலாளித்துவ தொழிற்சாலைகளில் வெவ்வேறு மட்டங்களுக்கான தொழில் வல்லுனர்களையும் தொழிலாளர்களையும் தரம் பிரித்துப் பயிற்றுவித்துக் கொடுக்கும் வேலையைத்தான். இந்த வேலை 'ப்ரி-கேஜி' நேர்முகத் தேர்விலேயே தொடங்கிவிடுகிறது. இப்படி தொழில்மயமான சமுதாயத்துக்குத் தேவையான செயல்திறனை வளர்க்கும் பயிற்சியைத்தான் நாம் 'கல்வி' என்று சொல்லிக்கொள்கிறோம். இந்தப் பயிற்சிக்குத் தேவையான தகவல்களைக் கேள்வி கேட்காமல் மனப்பாடம் செய்து கொண்டு பரீட்சையில் எழுதினால் அவர்களைக் கற்றவர்கள் (educated) என்று அழைக்கிறோம். ஆனால், உண்மையில் கற்றல் என்பது எவ்வாறு நிகழ்கிறது?

ஒருவர் அதுவரை அறிந்திராத ஒன்றைப் புதிதாக அறிவதை, அதாவது ஒரு புதிய அறிவை அடைவதைக் கற்றல் எனலாம். அந்தப் புதிய அறிவு அவரவரின் சுயமானக் கற்றலின் மூலம்தான் வளரும். சுயமாகக் கற்பதற்கு அவரவர் முதலில் தமது சுயமான கேள்விகளைக் கேட்க வேண்டும். அப்படி சுயமாகக் கேட்ட கேள்விகளுக்கு, சுயமுயற்சி கொண்டு அனுபவ பூர்வமாகவும், உள்ளுணர்வின் வழிகாட்டுதலாலும் சுயமான பதில்களையும் பாதைகளையும் கண்டறிய வேண்டும். அந்தப் பதில்கள் மற்றவர்களைப் பொறுத்தவரையில் தவறானதாக இருந்தாலும், அதை உண்ர்ந்து ஏற்றுத் திருத்திக் கொள்வதும் சுயமுயற்சியாலேயே நடைபெற வேண்டும். நமது உபநிடதங்கள் வாயிலாக பண்டைய பாரதத்தில் இருந்த கல்வி முறை இப்படிப்பட்டதாகத் தான் இருந்திருந்தது என்று தெரியவருகிறது.

ஆனால், மாற்றுப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் என்ன நடக்கிறது? கற்றல் என்கிற பெயரில் தகவல்களை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள். மாற்றுப் பள்ளிகளில் "தங்கள் சொந்த வரிகளில் ஓரளவுக்கு தங்கள் சொந்த பதில்களை" எழுத ஊக்குவிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்! ஆனால், யாருடைய கேள்விகளையோ அவர்கள் மேல் திணிக்கும் வரை, இந்தக் கற்றல் எப்படி உண்மையான கற்றலாக இருக்க முடியும்? ஆங்கிலமும் கணிதமும் வாரத்தில் எல்லா நாட்களும் பயில வேண்டும். நடனம், கைவேலை, விளையாட்டு, சமையல், தோட்டவேலை போன்றவற்றை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும், என்பது போன்ற முடிவுகளெல்லாம் குழந்தைகள் சார்பாக எடுப்பதற்கு நமக்கு இருக்கும் தகுதி என்ன? நமது இன்றைய தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில், அது "வெற்றி" என்று வரையறை செய்வதை அடையத் தேவையான "ஆங்கிலம், கணிதம், நவீன அறிவியல்" அகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை நான் எல்லா மாற்றுப்பள்ளிகளிலும் பார்க்கிறேன்.

'பசுமைப் புரட்சியின் கதை' நூலைப் படித்த பலர் "பாட நூல்களில் இன்று சொல்லிக்கொடுக்கப்படும் தகவல்கள் எல்லாம் தவறாக இருக்கிறதென்றால், சரியான தகவல்களைக் கொண்ட ஒரு புதிய பாடதிட்டத்தை நீங்கள் தயாரிக்கலாமே?" என்று யோசனை சொல்கிறார்கள். எத்தனை சரியான பதில்களாக இருந்தாலும்கூட, கேள்விகள் அவர்கள் மனங்களில் உதிக்காவிட்டால், அவையும் "மனப்பாடம் செய்வதற்கான தகவல்களாக" மாறிவிடுகின்றன. சுயமான கேள்விகள் மற்றும் ஆர்வத்திலிருந்து தொடங்கும் கல்வி மட்டுமே உண்மையானது; நிலையானது.

மனிதர்களுக்கு, குறிப்பாக இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, பல வகையான நுண்ணறிவுகள் இருப்பதாக வகைப்படுத்தலாம். அவை

1. verbal / linguistic intelligence - மொழி / சொல் சார்ந்த நுண்ணறிவு
2. logical / mathematical intelligence - தர்க்கம் / கணிதம் சார்ந்த நுண்ணறிவு
3. kinesthetic intelligence - உடல்தசை சார்ந்த நுண்ணறிவு. இவர்கள் நடனம் போன்று உடலை உபயோகிக்கும் கலைகளிலும் விளையாட்டுகளிலும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்
4. musical intelligence - இசை சார்ந்த நுண்ணறிவு
5. visual / spatial intelligence - பார்வை / வெளி சார்ந்த நுண்ணறிவு. இவர்கள் வரைகலையிலும், சிற்பக்கலையிலும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
6. intra-personal intelligence - மற்றவர்களைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கான நுண்ணறிவு
7. interpersonal intelligence - சுய உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கான நுண்ணறிவு

ஒவ்வொரு குழந்தையும் இந்த ஏழில் குறைந்த பட்சம் ஒன்றிலாவது மேதமையை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு குழந்தையும் தேடும் அறிவும், வளர்த்துக்கொள்ள நினைக்கும் செயல்திறன்களும், அவற்றின் முறைகளும் அதனதன் நுண்ணறிவு வகைக்கேற்ப மாறுபட்டதாகத் தானே இருக்கும்? அனைவருக்குமான ஒரே மாதிரியான பாடத்தை, ஒரே மாதிரியான முறையில் நடத்துவது எவ்வாறு சரியாக அமையும்?

மேலும் கற்றல் என்பது மூளையைக் கொண்டு நடக்கிறது என்ற அனுமானத்தைக் கொண்டு செயல்படுகின்றன இன்றைய பள்ளிகள். ஆனால், உண்மையான முழுமையான கற்றல் என்பது மூளையைத் தவிர, ஐம்புலன்களையும் உள்ளுணர்வையும் கொண்டு நடக்கிறது. ஒரு முழுமையான அனுபவத்தைக் கொண்டு பாடங்களை உள்வாங்கி தன்வயமாக்குவதுதான் முழுமையான கற்றல். நெல் பயிரை விளைவிப்பவர் அதைப் பற்றி எவ்வாறு அறிவார்? அதன் இலைகள் நிறம் மாறுவதைக் கண்டும், அது விளையும் நிலத்தை முகர்ந்து பார்த்தும், அந்த அரிசியை ஏன் அது விளையும் மண்ணையேகூடச் சுவைத்துப் பார்த்தும், அந்தப் பயிரைத் தொட்டுப் பார்த்தும், அந்தச் செடிகள் காற்றில் ஆடி அசையும் போது உண்டாகும் ஒலியைக் கேட்டும், அதன் அழகைக் கண்டு ரசித்தும்,விதைத்து முதல் இலை வந்ததும் ஆனந்தித்தும், உள்ளுணர்வு கொண்டு அந்த நெல் பயிரின் ஆரோக்கியத்தை அறிந்தும், அதாவது அந்த அனுபவத்தை முழுமையாக உள்வாங்கியே அவர் கற்கிறார். இந்த முழுமையான அனுபவத்தால் கற்பவருக்கும் கற்பிக்கப்படும் பொருளுக்கும் இருக்கும் இடைவெளி மறைந்து, ஆனந்தமயமான கற்றல் ஒன்று மட்டுமே நிற்கிறது.

*

எல்லா விஷயங்களையும் ஒவ்வொரு குழந்தையும், சுயமாகக் கேள்வி கேட்டு தானாகவே கற்றுக்கொள்ள வேண்டுமா? ஏற்கனவே நன்கறிந்த விஷயங்களை முதிர்ந்த தலைமுறையினர் இளைய தலைமுறையினருக்குக் கைமாற்றிக்கொடுப்பதற்கு இந்தக் கல்வி முறையில் இடமில்லையா என்கிற கேள்வி எழலாம். அதை ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து, கேள்விக்கு உட்படுத்தி அந்த உண்மையை உணர்ந்தால் மட்டுமே அதைக் கற்றல் எனமுடியும்; அந்த அறிவு தங்களுடையதாக முடியும். அதுவரையில், எத்தனை ஆழ்ந்த உண்மையாக இருந்தாலும், அது மூளையில் தேக்கி வைத்திருக்கும் ஒரு தகவல் மட்டுமே. இந்த செயல்முறையில் சில விஷயங்கள் சரியென்று  தோன்றவில்லை என்றால்,  அவற்றைத் தற்காலிகமாக நிராகரிப்பதற்கும் கூட இடமுண்டு. மற்றவர்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும்போதுதான் பல குழப்பங்கள் எழுகின்றன. இதைத் லெபனீய தத்துவவாதி கலில் கிப்ரான் எத்தனை அழகாக விளக்கியுள்ளார்!

"உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர, உங்கள் சிந்தனையைவழங்காதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்த சிந்தனையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தேகங்களுக்கு ஒரு இல்லத்தை வழங்கலாம். அவர்கள் ஆன்மாக்களுக்கல்ல. ஏனெனில் அவர்களின் ஆன்மா, கற்பனையிலும் பிரவேசிக்க முடியாத நாளை எனும் வீட்டில் வசிக்கிறது. நீங்கள் அவர்களைப் போன்றிருக்க முயற்சிக்கலாம். ஆனால், உங்களைப் போன்று அவர்களை ஆக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை என்பது பின்னோக்கிச் செல்வதுமல்ல. நேற்றைய தினத்தோடு தேங்கிவிடுவதும் அல்ல."

*

எனது விமர்சனத்தை இதோடு நிறுத்திக்கொண்டு, எனது உரையின் இரண்டாம் பாகத்துக்குச் செல்கிறேன். நான் முன்வைக்கும் மாற்றுக் கல்விமுறை எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஒரு ஜீவனுள் மலரும் ஆன்மாவில் ஏற்கனவே உட்பொதிந்துள்ள அறிவையன்றி, வேறு எதையும் அதன் மனதிற்குக் கற்பிக்க முடியாது. கல்வியெல்லாம் உள்ளிருப்பதை வெளிப்படுத்துவதே ஆகும். ஆவதெல்லாம் மலர்வதே ஆகும். இந்த உண்மையை, நான் முன்பு பட்டியலிட்ட எல்லா ஞானிகளும், கல்விச் சிந்தனையாளர்களும் சொல்லிச் சென்றுள்ளனர். குழந்தைகளின் சுயமலர்தலுக்காக என்ன செய்ய வேண்டும் என்கிற இந்தத் தேடலில் உங்கள் அனைவரைப் போலவே நானும் பல காலம் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் கண்டிப்பாக நான் இதுவரை பார்த்த எந்தப் பள்ளியிலுமே இது நடக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. இந்தக் காரணத்தால் தான் நான் எனது மகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக இல்லை.

மாணவர்களை மூன்று பருவங்களாகப் பிரித்தால், மாற்றுக் கல்வியைப் பற்றிய புரிதலுக்கு வசதியாக இருக்கும். 8 வயது வரை 'இளம் குழந்தைப் பருவம். 8-14 வயது வரை 'வளர்ந்த குழந்தைப் பருவம். 15-20 வயது வரை 'வாலிபப் பருவம்.

நமது இந்திய மரபில், எட்டு வயதாகும் குழந்தைதான் முறைப்படி பயிலுவதற்காக ஆசிரியரிடம் சேர்க்கப்படும். அதுவரையில் அதன் சுயமலர்தலுக்காகத் தேவையானதெல்லாம் அது வளரும்
சூழலிலேயே கிடைக்கப்பெற வேண்டும். அவர்கள் தங்களது பெற்றோருடன் இருப்பதே அவர்களுக்குச் சிறந்தது.

இளம் குழந்தைகளின் கற்றலுக்குத் தேவையான அதிமுக்கியமான ஒன்று பயமற்ற சுதந்திரமான மனம். அதை அடைவதற்கு முக்கியமாகத் தேவை உடல் மற்றும் மனரீதியான 'பாதுகாப்பு'. அவர்கள் முழுமையாக நம்பும் அவர்களின் பெற்றோர்கள் அல்லது அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பிற பெரியோர்கள், அன்பும் அரவணைப்பும் மரியாதையுமே அவர்களை வெளியுலகை நாடியறிய உதவும். இந்த அடிப்படை பாதுகாப்பு இல்லாத சூழல்களில் குழந்தைகள் தங்கள் உயிர்சக்தி அனைத்தையும் தற்காப்புகாகவே செலவிட்டுவிடுவார்கள். ஆழமான மனவலி, வெளியுலகின்மேல் இருக்கும் ஆர்வத்தைக் குறைத்துவிடும்; இயல்பான உள்ளுணர்வை மூடி மறைத்து விடும். எந்தத் தருணத்திலும், குழந்தை பாதுகாப்பாக உணரும் பெரியவர் யாராவதுடன் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தையின் எந்த உணர்ச்சியையும் உள்ளச் சமநிலையுடன், அமைதியாக ஏற்றுக்கொண்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை அழுதால் "நல்ல பாப்பான்னா அழ மாட்டாளே!" என்றெல்லாம் சொல்லாமல், அதன் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு இடம் கொடுத்தாலே, அதன் கற்றல் திறம் மேலும் வளரும்.

குழந்தைகளை தாங்களாக இருக்கவிட வேண்டும். அவர்கள் தாங்களாகவே விளையாட்டுகளை உருவாக்கவிட வேண்டும். தேவையற்ற பொம்மைகளையும், ஒலியெழுப்பும் பாட்டரி கருவிகளையும் அவர்களிடன் கொடுக்காமல், திறந்த வெளிகளிலும் அவர்கள் பாதுகாப்பாக உணரும் மற்ற பெரியவர்களிடமும் குழந்தைகளிடமும் அவர்களை அடிக்கடி உரையாடவிட வேண்டும். தாங்களாகவே என்ன கேள்வி கேட்கிறார்களோ, அவற்றுக்கு உண்மையான பதில்களை நமக்குத் தெரிந்தவரை கொடுக்கலாம்; இது நமக்குத் தெரிந்த வரைக்கும்தான் உண்மை என்றும், அவர்களை சுயமாகச் சிந்திக்கவும் தூண்டலாம்.

'ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு கிராமமே தேவை' என்று ஒரு ஆப்பிரிக்கப் பழமொழி சொல்கிறது. ஒரு குழந்தையின் பல்வேறு பரிமாணங்கள் ஒருங்கிணைந்து வளர்ச்சியடைய, பல வகையான வாழ்க்கைச் சூழல்களுக்கு அவர்களை அறிமுகம் செய்ய வேண்டும். பல வகையான பொது இடங்கள், பல விதமாக வாழும் ஏழை பணக்கர நடுத்தர மக்களின் குடும்பங்கள், கட்டுப்பாடுள்ள மற்றும் சுதந்திரமான இடங்கள், கிராம மற்றும் நகர்ப்புறங்கள், கடைகள், பண்ணைகள், பல தொழில்களை மேற்கொள்ளும் இடங்கள், இப்படி பல வகையான சூழல்களுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போக வேண்டும். இவ்வாறு செய்யும் போது குழந்தைகளின் மனங்களில் பலவகையான கேள்விகள் எழும்பும். "என்ன? ஏன்? எப்படி? யார்? எப்போது?' என்று சதா கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் கேள்விகளில் தொடங்கிதான் உண்மையான கற்றல் நிகழும். நான் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கும் மேலாக எனது மகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே சென்றுவிடுகின்றது. ஆனால், அந்த அனுபவத்தை முழுமையாக அரவணைக்கும்போது அது அத்தனை சுவாரசியமாக ஆகிவிடுகிறது. சில ஆழமான அடிப்படைக் கேள்விகளைக் கேட்கும்போது சிந்திக்கவைக்கிறது.

பார்த்துக்கொண்டு கேள்வி கேட்பது மட்டுமல்ல. குழந்தைகளுக்குப் பெரியவர்களின் உலகமே மிகவும் சுவாரசியமானது. அம்மாவைப் போலவும் அப்பாவைப் போலவும் சமயலறையிலும் தோட்டத்திலும் வேலை செய்வதுதான் பிடிக்கும். 'அம்மா, நானும் சப்பாத்தி செய்யட்டுமா? கத்திரிக்காய் வெட்டிக்கொடுக்கட்டுமா?' என்பதை எத்தனை முறை கேட்டிருப்போம். பொறுமையுடன் அன்புடனும் அவர்களை நமது உலகுக்கு வரவேற்று இணைத்துக்கொண்டால் அவர்களின் கற்றலில் பாதியும் அங்கே நடைபெறுகிறது.

ஏற்கனவே பார்த்ததுபோல, தாங்களாகவே உருவாக்கும் விளையாட்டுகளில் அவர்களுடைய முக்கியமான கற்றல் நிகழ்கிறது. விளையாட்டைப் பற்றி சொல்வதற்கு இன்னும் எத்தனையோ இருக்கிறது!

இந்தப் பருவத்தில் குழந்தைகளை எழுதப்படிக்கக் கற்றுக் கொடுக்காமலிருப்பது  மிகவும் சிறந்தது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது வேறு விஷயம். இந்தப் பருவத்தில், குழந்தைகள் ஐம்புலன்களைக் கொண்டு தங்களது வெளியுலகை அனுபவப்பூர்வமாக உணர்வதிலேயே நாட்டம் கொண்டிருப்பார்கள்.

இயற்கைச் சூழலுடன் தொடர்பு வேண்டும். பண்ணைகள், காடுகள், நீர்நிலைகள் போன்று எதுவாக இருந்தாலும் சரி, அங்கிருந்து அதன் ஆன்மாவிற்குக் கிடைக்கும் இணைப்பும் ஊட்டமும் அத்தியாவசியமான ஒன்று.

கடைசியில் அதி முக்கியமான ஒன்று, 'அமைதிக்கான சுதந்திரம்'. குழந்தைகள் தேவைப்பட்டால் மணிக்கணக்கில் ஒன்றும் செய்யாமல், பேசாமல் சும்மா இருத்தலுக்கு இடம் கொடுக்க வேண்டும். இந்தத் தருணங்களில்தான் அவர்கள் மனங்களில் புதிய கேள்விகள் பிறக்கின்றன. கிடைத்த தகவல்களை உள்ளுணர்வைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, தனக்கு சரியாகப் படுகிறதா அல்லது தவறாகப் படுகிறதா என்ற அறிதல் கிடைக்கிறது. அமைதியாக இரு மணி நேரம் கழித்த பின்பு என் மகள் பல ஆழமான, அவளை மிகவும் பாதிக்கும் கேள்விகளைக் கேட்பாள்.

இன்றைய சூழலில், குறிப்பாகத் தொழிலாளர் குடும்பங்களில், குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்போ, மன வாள்ர்ச்சிக்கு சரியான சூழலோ இல்லாமல் இருப்பது உண்மைதான். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அப்பாவிடமிருந்தும், தனது வாழ்க்கையின் மேல் உள்ள வெறுப்பை வெளிப்படுத்த தங்களை அடிக்கும் அம்மாவிடமிருந்துமே இந்தக் குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தேவையான ஒன்றாக இருக்கிறது! பள்ளிக்கூடங்களை சரணாலயங்களாக ஆக்கி, அவர்களை அன்புடன் அரவணைத்துப் பாதுகாப்பான சூழலைக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் ஆசிரியர்கள்.

*

இளம் குழந்தைகளுக்கு இவையனைத்தும் ஓரளவு கிடைத்துவிட்டாலே, ஒரு அருமையான அடித்தளம் அமைந்துவிடுகிறது. வெளியுலகைப் பற்றித் தாங்களாகவே ஒரு புரிதலுக்கு வருகிறார்கள். அதில் தங்களின் இடம் என்ன, தங்களுக்கு அதனுடனான உறவென்ன என்பதெல்லாம் ஓரளவுக்குத் தெளிவாகிறது. இந்த பாதுகாப்பான, திடமான தளத்தில் இருந்துகொண்டு குழந்தை அவளுடைய அறிவாற்றலை மேலும் விரிவாக்கத் தயார்படுத்திக் கொள்கிறாள்.

இளம் பருவத்தில் சுதந்திரமாக வளர்ந்து, தங்களது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தயக்கமின்றி வெளிப்படுத்தப் பழகும் குழந்தை, ஏழு அல்லது எட்டு வயதாகும்போது, வெளியுலகைப் பற்றிய சிக்கலான விஷயங்களை ஆராயத் தொடங்குகிறது. ஆரோக்கியமாக வளர்ந்த எட்டு வயதான குழந்தை, முறையான பயிற்சிகளுக்குத் தயாராகிறது. இந்த சமயத்தில் என்ன பயிற்றுவிப்பது? மனப்பாடம் செய்வதற்கான தகவல்களைப் புகட்டாமல், அவர்களின் ஆற்றல்களை வளர்க்கும் பாடங்களைக் கையாளலாம். கற்பனைத்திறன், படைப்புத்திறன், சிந்திக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் வலுப்படுத்தும் செயற்பாடுகளையும் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே பார்த்த multiple-intelligences (பன்முக அறிவு) பற்றிய புரிதலுடன் இந்தக் குழந்தைகளை அணுகினால், ஒவ்வொரு குழந்தையிலும் ஒரு மேதையை உருவாக்கலாம். இசை-நுண்ணறிவு கொண்ட ஒரு குழந்தை மற்ற துறைகளில் ஆர்வமற்றவள் என்பது பொருளல்ல. அவள் உலகை உணர்வது பெரும்பாலும் இசையின் மூலமாக என்பது பொருள். ஒரு இசைக் கருவியை எளிதாக வாசிக்கக் கற்றுக்கொள்ளூம் குழந்தை, அதன் ஏழு சுரங்களுக்குமான இடைவெளி, உறவுகள் ஆகியவற்றைப் பற்றிக் கற்கும் போது கணிதம் கற்கிறாள்; அதன் ஒலி எவ்வாறு எழும்புகிறது, அது என்ன உலோகத்தைக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது என்று ஆராயும் போது அறிவியல் கற்கிறாள்; கண்ணை மூடிக்கொண்டு அந்தக் கருவியை வாசிக்கும்போது, உடலைக் கொண்டு உணரக் கற்கிறாள்; வெவ்வேறு மொழிகளில் பாடல்களைக் கற்கும்போது சொல்திறன் வளர்கிறது; தனியாக வாசிக்கும்போது தனது உணர்வுகளுடன் இணைகிறாள்; மற்றவர்களுடன் சேர்ந்திசை உண்டாக்கும் போது interpersonal intelligence வளர்கிறது. இப்படி எந்த வகையான நுண்ணறிவைக் கொண்டும், அதற்கே தனித்தன்மை வாய்ந்த கல்விமுறையை, நம்மிடமிருந்து சிறிதளவு உதவி மட்டுமே பெற்று அவர்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்த இரண்டு பருவங்களுக்குமான பள்ளிக்கூடத்தில் என்னவெல்லாம் இருக்கும்?

- எந்தக் குழந்தையும் ஆசிரியரும் எப்போது வேண்டுமானாலும் சென்று வசதியாக அமர்வதற்கான ஒரு அமைதி அறை;
- குழந்தைகள் ஆசிரியர்களிடம் ஏதேனும் பாடங்களைக் கற்க விரும்பினால் அவர்கள் அமர்ந்து பகிர்வதற்கான கலந்தாய்வு அறை;
- நூலகம்;
- கைவினைப் பொருட்களைச் செய்யும் பட்டறைகள்
- பாண்டப் பட்டறை, தச்சுப் பட்டறைகள்
- நீச்சல் குளம்
- விளையாட்டுத் திடல்கள்
- உணவு, மூலிகை, பூந்தோட்டங்கள்
- அறிவியல் பரிசோதனைகளைச் செய்து பார்ப்பதற்கு ஆய்வுக்கூடங்கள்
- மாணவர்களின் படைப்புக்களுக்கான கண்காட்சியகம்
- இசை, நாடகம், நாட்டியங்களுக்கு ஏற்ற அறைகள்
- கலை அரங்கங்கள்
- யோகாசனம் பயிற்சி அறை
- சொற்பொழிவுக் கூடம்
- பொருட்களையும் கருவிகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கிடங்குகள்.

இத்தனையும் ஒரு குழந்தைக்கு அறிமுகமானால், அது குழம்பிவிடாதா? எதில் கவனம் செலுத்துவது என்று அதற்கு எப்படித் தெரியும்? என்றுப் பலரும் கேட்கின்றனர். இந்தக் கேள்விக்கு விடை, நாம் முன்பே பார்த்த உதாரணத்தில் பொதிந்திருக்கிறது. ஒரு விதை, அது மாமரமாக வளரவேண்டுமா, அல்லது வேப்ப மரமாக வளரவேண்டுமா என்னும் நுண்ணறிவைக் கொண்டுள்ளது. ஒரே மாதிரி இருக்கும் கீரை விதைகூட, அது அறு கீரையாக வளர வேண்டுமா, அல்லது முளைக்கீரையாக வளரவேண்டுமா என்னும் நுண்ணறிவுடன்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு செடி வளர்வதற்குத் தேவையான நல்ல வளமான மண்ணைப் போலவே ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற சூழலை அதற்கு உருவாக்கிக்கொடுத்தாலே, அதன் நுண்ணறிவு சிறப்பாக இயங்கத் தொடங்கிவிடும். இதற்கு நமக்குத் தேவையெல்லாம் உயிர்ச்சக்தியின் மீது உணர்ந்த, ஆழ்ந்த நம்பிக்கை மட்டுமே.

கீதையில் சொல்லியிருப்பது போல, ஆரோக்கியமாக வளர்ந்த ஒவ்வொரு குழந்தையும் அதன் சுயதர்மத்தை இனம்காணக் கற்றுக்கொள்கிறது. சுயதர்மம் என்பது, ஒவ்வொரு ஆன்மாவும், வெளியுலகில் அதன் பங்கேற்பின் மூலம் தன்னை உணர்வதற்காக அமைத்துக் கொள்ளும் தனித்தன்மைவாய்ந்த பாதை. அனுபவ அறிவு விரிவடைய விரிவடைய கூடவே சுயதர்மமும் மாறிக்கொண்டே போகும். ஆனால், அந்த பாதையும் மாற்றமும் அந்த ஆன்மாவினுடையதாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, வெளியிலிருந்து எந்த ஊக்குவிப்பும் இல்லாமல், தனக்குள்ளிருந்தே கற்றலின் மீதான ஆவல் அணையாத விளக்காய் சுடர் விட்டு எரிகிறது.

*

இவற்றுக்குப் பின், வாலிபப் பருவத்தில், தேர்ந்தெடுத்த ஒரு அல்லது சில துறைகளில் சிறப்பறிவு / தேர்ச்சி பெறுவதற்காகத் தயாராகிறார்கள். இந்தப் பருவ மாணவர்களுக்காக நாம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும். ஒன்று, அறிவியல், கலை, இலக்கியம் போன்ற வெவ்வேறு துறைகளில் இந்திய மற்றும் பிற கலாச்சாரங்களிலிருந்தும் சேகரித்த சிறந்த செவ்வியல் படைப்புகளை அவர்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்ய வேண்டும். ஆயுர்வேதம், உபநிடதம், நாட்டியசாஸ்திரம், காளிதாசர், கம்பர், வியாசர், வால்மிகி ஆகியோரின் படைப்புகள் என்று அத்தனை பொக்கிஷங்களையும் தூசு தட்டி மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இவற்றில் தேர்ந்த அறிஞர்களையும் இவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்களுக்கென வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம். அவை மாணவர்களின் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு முழுமையான உலக அனுபவமும், உலக அறிவும் அடித்தளமாகக் கொண்ட இந்த வாலிபர்கள், இத்தகைய சிறப்பறிவை நோக்கிப் பயணித்தாலும், அவர்களின் நுண்ணறிவு ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் செயல்படும்.

காந்தியடிகள் முக்கியத்துவம் அளித்த சுயதேவை பூர்த்தி என்ற கொள்கையை வாலிபப் பருவத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். உபயோகமுள்ள ஏதாவது ஒரு தொழிலிலாவது தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் பருவத்திற்குள் ஒவ்வொரு மாணவரும் உடல், மனம், உள்ளம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு பூரண மனிதராக உருவாக முடியும்.

இந்த முறையில் தேர்வுகளுக்கு இடம் உண்டா? இப்படிப்பட்ட ஒரு கல்விக்குச் சான்றிதழ் எப்படி வழங்குவது? தேர்வுகள் வைப்பதற்கு நாம் பொதுவாக கொடுக்கும் காரணம், "மாணவர்களின் முன்னேற்றத்தை அறிவதற்கு" என்பதுதான். நாம் செய்யும் தவறுகளாலும், நாம் சந்திக்கும் தோல்விகளாலும் பல முக்கியமான பாடங்களைக் கற்கிறோம் என்னும் கருத்தில் அனேகமாக இங்கு அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் உடன்பாடிருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், இன்றைய பள்ளிகளில் தேர்வுகளின் முடிவுகள் வரும் வரைக்கும் வியர்த்து, அடி வயறு கலங்கிப் போவதற்குக் காரணமென்ன? தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே கற்றவர்கள் எனக் கொள்ளலாம் என்றும், தோல்வியடைந்தால் அது அந்த மாணவன் மேல் குத்தப்படும், அவன் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல வேண்டிய ஒரு முத்திரையாகவே உள்ளது. தேர்வுகள் கற்றலில் இருக்கும் ஆர்வத்தையும் ஆனந்தத்தையும் உறிஞ்சி எடுத்தே விடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தேர்வுகளைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? "தேர்வுகளுக்காக அத்தனை விஷயங்களையும் மூளையில் திணித்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனது கடைசி பள்ளித் தேர்வு முடிந்ததும் குறைந்தது அடுத்த ஓராண்டு காலத்திற்கு, எந்த அறிவியல் கருத்தைப் பற்றியும் சிந்திப்பதற்கோ படிப்பதற்கோ ஒரு துளி கூட ஆர்வமில்லாமல் போனது!"

தேர்வுகள் உண்மையில் மாணவர்களை தொழில்மயமாக்கப்பட்ட சமுதாயத்தில் பங்கேற்பதற்காகத் தரம் பிரிப்பதற்காகவே நடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட முத்திரைகளுக்கும் தரம்-பிரித்தலுக்கும் மாற்றுக் கல்வியில் இடமில்லை. மாணவர்களுடன் அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுயமுன்னேற்றத்தில் அவர்களுடைய சுய-அளவீட்டுத் திறனை வளர்த்து, அவர்கள் புதிய சிக்கல்களை எதிர்கொண்டு மேன்மேலும் முன்னேறுவதை ஊக்குவிக்க வேண்டும். தங்களது உள்ளுணர்வை இழக்காத, தோல்வியைக் கண்டு பயப்படாத மாணவர்கள், தங்களுடைய முன்னேற்றத்தைப் பற்றிய பின்னூட்டம் மரியாதையுடன் கொடுக்கப்படும்போது, அதை மகிழ்ச்சியோடு ஏற்றுச் செயல்படுவார்கள்.

சான்றிதழ்கள் உண்மையில் எங்கு அவசியமாகிறது? ஒரு கட்டிடம் கட்டும் பொறுப்பை ஒரு கட்டடப் பொறியாளருக்குக் கொடுப்பதற்கு முன், அவர் அந்தத் துறையில் முறையான பயிற்சி பெற்றுத் தேர்ந்துள்ளாரா என்பது தெரிவது அவசியமாகிறது. அதற்கென, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தேர்வு செயற்குழு அமைத்து, தேர்வுகளின் மூலம் சான்றிதழ்கள் வழங்கும் அமைப்பை உருவாக்கலாம். இந்தத் தேர்வுகள் வெறும் மூளைத் திறனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்ட ஒருங்கிணைந்த முறையில் அமைய வேண்டும். இந்தத் தேர்வுகளில் அமர்வதற்கு எந்த விதமான சான்றிதழ்களோ, பள்ளிக்கூட அனுபவமோ அவசியமென்று இருக்கக் கூடாது. தன்னம்பிக்கை கொண்ட யார் வேண்டுமானாலும் இவற்றில் அமர அனுமதிக்கப்பட வேண்டும்.

நான் முன்வைத்திருக்கும் மாற்றுக் கல்வியை செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்ன தெரியுமா? குழந்தைகளின் நுண்ணுணர்வை மதித்து, அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளித்து, ஒவ்வொரு மாணவரின் சுயதர்மத்தைக் கண்டறிய உதவியாக இருந்து முன்னேற்றிவிடும் வேலையைச் செய்வதற்கு தேவையான ஆசிரியர்கள் நம்மிடையே காண்பதற்கு அரிதாக இருப்பதுதான். அந்தக் காலத்தில் குருகுலங்களில் முழுமையான அறிவும் அனுபவமும் பெற்ற ஞானிகளே இந்தப் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வந்திருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால், பிளவுண்ட உலக நோக்கும், தன்னலமும், மன இறைச்சலும் ஓங்கியிருக்கும் நவீன உலகில், இத்தகைய ஞானிகளை எளிதில் காண முடிவதில்லை என்றாலும், அந்த ஞானத்தை இனம்கண்டு, அதை அடைவதில் ஆவல் கொண்டவர்களையாவது ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும். நான் ஒரு பள்ளிக்கூடத்தைத் துவங்கினால், அங்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களைக் குறைந்தது இந்த ஆறு கேள்விகளையாவது கேட்பேன்.

1. உங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்துக்கு இருக்கும் இடம் என்ன? சுதந்திரம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? நீங்கள் சுதந்திரத்தை விரும்புகிறீர்களா? சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கிறீர்களா?

2. நீங்கள் பள்ளி மாணவராக இருக்கும்போது உங்கள் மேல் திணிக்கப்பட்ட 5 பொய்கள் என்ன? உங்களுக்கு உடன்பாடில்லாத ஐந்து விழுமியங்கள் என்ன?

3. குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏதாவது இருப்பதாகக் கருதுகிறீர்களா? இருந்தால், அது என்ன?

4. குழந்தையிடம் "எனக்குத் தெரியாது!" என்று தயக்கமில்லாமல் உங்களால் சொல்ல முடியுமா?

5. உங்களுக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலோ, கலையோ தெரியுமா? (இந்தக் கேள்வியை, ஆசிரியராக வேண்டும் என்று கூறிக்கொண்டு தன்னிடம் வந்த ஒவ்வொருவரையும் கேட்பாராம், வினோபா.)

6. மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்குமே பதில் 'இல்லை' அல்லது 'தெரியாது' என்றமைந்தால், அவற்றைப் பற்றிய தீவிரமான தேடலில் அடியெடுத்த வைக்க விருப்பம் உள்ளதா.

*

இவை, எல்லாவற்றிற்கும் மேலான ஒன்றுள்ளது. நாம் மேற்கொள்ளும் எல்லா கல்வியும் நமது வாழ்க்கை நோக்கத்தைப் பூர்த்தி செய்யுமாறுதான் அமைய வேண்டும். ஜெயமோகன் அவர்கள் இதைப் பற்றி எழுதிய சுவாரசியான ஒரு கற்பனை உரையாடல் நினைவுக்கு வருகிறது. ஒருவர் தனது வாழ்நாளெல்லாம் பல வகையான பயிற்சிகளை எல்லாம் முடித்து விட்டு, எல்லாவற்றிலும் முதல் இடத்தில் தேர்ச்சியும் பெற்று ஓய்ந்த பிறகு, ஒருவகையான வெறுமையுடன் "நான் யார்? இதெல்லாம் எதற்காக? எனது வாழ்க்கையின் இலக்கு என்ன?" என்ற கேள்வியைச் சுமந்து கொண்டு ஒரு ஞானியை சந்திக்கச் செல்வார்.

இந்தக் கேள்வியைப் பற்றிய தேடல்தான், என்னைப் பொறுத்த வரையில் அதி முக்கியமான ஒன்று. "மனிதன் ஒரு ஆன்மிகவாதி. கடவுளை அடைவதே வாழ்வின் இலட்சியம். இதற்கான கருவியாகத்தான் நமது அறிவும் திறனும் பயன்பட வேண்டும்." என்று கூறிவிட்டுச் சென்றார் காந்தியடிகள். "குழந்தை வளர்ப்பு ஒரு வழிபாட்டைப் போன்றது" என்றார் விவேகானந்தர். இதை உணர்ந்து, தங்களது சொந்த வாழ்க்கைத் தேடலில் தீவிரமாக இருக்கும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே மாற்றுக் கல்வியைப் பற்றிய சிந்தனையிலும் செயற்பாட்டிலும் உண்மையாக ஈடுபட முடியும்.

நன்றி!

சுதந்திர தினவிழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை


சங்குக்குள் கடல்- 
தேசமெனும் தன்னுணர்வு

-ஜெயமோகன்



நண்பர்களே, இந்திய சுதந்திரத்தைக்கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த அரங்குக்கு என் வணக்கம்.

இந்திய சுதந்திரத்தைப்பற்றிய ஓர் உரையில் அம்பேத்கர் அவர்கள் ‘ஜனநாயகத்துக்கான சுதந்திரம்’ என்ற சொல்லை குறிப்பிடுகிறார்.

அது மிகமிக நேர்நிலையான சொல்லாட்சி. வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்றோம் என்பதைவிட, அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றோம் என்பதைவிட, அது மேலும் பொருத்தமாக இருக்கிறது. முழுமையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்வதற்கான சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம். சமத்துவத்துக்கும் நீதிக்கும் தன்னிறைவுக்கும் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த பொன்னாளில் நம் மகத்தான தேசச்சிற்பிகளில் ஒருவரின் அச்சொற்களை நினைவுறுவோம். ஆம், நாம் ஜனநாயகத்துக்கான சுதந்திரத்தைப்பெற்ற ஒரு தேசம்.

நாம் அச்சுதந்திரத்தை பயன்படுத்தி சமத்துவத்தையோ தன்னிறைவையோ அடைகிறோமோ இல்லையோ அச்சுதந்திரத்தை பரிபூர்ணமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததா இல்லையா என்றே நம்மிடையே மாறுபட்டக் கருத்துக்கள் உள்ளன. நாடு என்று ஒன்று உண்டா இல்லையா என்றே விவாதங்கள் நிகழ்கின்றன. ஆம், நாம் கொண்டாடிக்கொண்டிருப்பது நம்மிடையே முரண்படுவதற்கான சுதந்திரத்தை.

திருப்பூரில் இன்று பேசப்போவதைப்பற்றிச் சொன்னபோது மலையாள இடதுசாரி நண்பர் சொன்னார் ‘’ இந்தியா என்று ஒரு தேசம் இல்லை. அது வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது’.

நான் சொன்னேன் ‘இது பெரும்பாலான இடதுசாரிகள் சொல்லிக்கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பாடு. பொது நிர்வாகமுறையை, பொதுஅரசாங்கத்தைத்தான் நீங்கள் தேசம் என்று சொல்கிறீர்கள்.இந்தியா முழுமைக்கும் ஒரு பொது நிர்வாகமுறை அல்லது அரசு இருந்ததில்லை என்பது உண்மை. ஆனால் இன்று உலகிலுள்ள எந்த தேசத்திலும் அப்படி ஒரு நிர்வாகமுறையோ அரசோ அக்காலத்தில் இருந்ததில்லை என்பதை மறந்துவிடுகிறீர்கள். இங்கிலாந்தோ ஜெர்மனியோ அமெரிக்காவோகூட முற்காலத்தில் மைய அரசும் பொதுநிர்வாகமும் கொண்டிருக்கவில்லை. அப்படியென்றால் உலகத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் தேசம் என்று எதுவுமே கிடையாது’

நண்பர் சொன்னார் ‘ஆம், அரைகுறை இடதுசாரிகள் அப்படிச் சொல்கிறார்கள். நான் சொல்வது அந்த அர்த்தத்தில் அல்ல. நான் சொல்வது வேறு. இந்தியாவுக்கென ஒரு பொதுவரலாறு கிடையாது. தேசம் என்பது அதன் வரலாற்றால்தான் கட்டமைக்கப்படுகிறது. அந்த தேசத்தில் வாழும் மக்கள் தங்களுக்கென ஒரு பொதுவரலாறை உருவாக்கி நினைவில் நிறுத்தியிருந்தால்தான் அவர்கள் ஒரு தேசம். இந்தியாவுக்கு வெள்ளையர்கள் வரும்போது அப்படி ஒரு பொதுவரலாறு இங்கே இல்லை. நாம் இன்று பேசக்கூடிய இந்திய வரலாறு என்பது வெள்ளைய அறிஞர்களால் எழுதி நமக்கு அளிக்கப்பட்டது. அப்படி அவர்கள் வரலாற்றை எழுதியபின்னர்தான் நாம் ஒரு தேசமாக நம்மை உணர்ந்தோம். அப்படி உணர்ந்தபினனர்தான் இங்கே தேசிய இயக்கமே ஆரம்பிக்கப்பட்டது. அதாவது இன்றைய இந்தியாவை உருவாக்கியவர்கள் வெள்ளைய ஆட்சியாளர்கள் அல்ல. இந்தியாவின் வரலாற்றை எழுதிய வெள்ளைய அறிஞர்கள்தான்’

நான் கேட்டேன் ‘இந்தியா வரலாறு அற்ற நிலப்பரப்பு என்று காலனியகால வெள்ளை அறிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். பல இடதுசாரிகள் அதை ஏற்றுக்கொண்டு பேசியிருக்கிறார்கள். நீங்கள் அதைச் சொல்கிறீர்களா?’

’இல்லை’ என்றார் நண்பர். ‘இந்தியாவுக்கு என பொதுவரலாறுதான் இல்லை. ஆனால் இங்கே குடும்பங்களுக்கு வரலாறு உண்டு. இனக்குழுக்களுக்கு வரலாறு உண்டு.. அந்தவரலாற்றுணர்வு ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால்தான் நீ யார் என்று கேட்டால் நான் இந்த குலம், இன்ன சாதி என நம்மவர் சொல்கிறார்கள். நான் இந்தியன் என்று சொல்லமுடியவில்லை. வரலாறு என்பது வரலாற்றுத்தன்னுணர்வு வழியாக உருவாகக்கூடியது. அப்படி ஒரு தேசியத்தன்னுணர்வு இந்தியாவில் இல்லை. அது வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது’

நண்பர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஒரு தேசமா? நமக்கென்று ஒரு பொதுவரலாறு உண்டா? அந்த வரலாற்றுப்பிரக்ஞை நம்முடைய மனத்திலும் நம் ஆளுமையிலும் கலந்திருக்கிறதா? நமக்குள்ள தன்னுணர்வு என்பது குலம், சாதி சார்ந்தது மட்டும்தானா? நமக்குத்தேசியத் தன்னுணர்வு இல்லையா? நம்மில் பலர் இந்தியச் சுதந்திரத்தை நிராகரிப்பது அல்லது புரிந்துகொள்ளாமலிருப்பது நாம் உள்ளூர ஒரு தேசமாக உணராமலிருப்பதனால்தானா?

நான் இங்கே அதைப்பற்றித்தான் பேசப்போகிறேன்

*

இன்னொரு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். நான் ஒரு பெரியவருடன் பயணம்செய்துகொண்டிருந்தேன். அவர் இடதுசாரி நண்பருக்கு நேர் எதிரானவர். அத்வைதி. அப்போது இந்தியத்தேர்தல் நடந்து முடிவுகள் வர ஆரம்பித்திருந்தது. ஜனதாக்கட்சி வீழ்ச்சி அடைந்து இந்திரா பதவிக்கு மீண்டு வந்தார். நான் ஆவலுடன் சென்று செய்தித்தாளை வாங்கினேன். வாசித்துவிட்டு பெரியவருக்கு நீட்டினேன். அவர் வாங்கவில்லை. நான் செய்திபற்றி ஏதோ பேச ஆரம்பித்தேன். அவர் தன் நெஞ்சை சுட்டி ”‘இதற்கு இந்த மண்ணுடன் எந்த உறவும் இல்லை’ என்று சொன்னார். தன்னை அவர் ’இது’ என்றுதான் சொல்வார்.

அவரது அகம் தூய்மையான ஒரு தன்னிருப்பு , அதற்கு இந்திய மண்ணோ, அதன் அடையாளங்களோ இல்லை என்பது அவரது கருத்து. ஆகவே அதன் அரசியலில் அவருக்கு ஆர்வமில்லை. அதன் வாழ்வோ தாழ்வோ அவருக்குப்பிரச்சினை இல்லை. அவருக்குள் இருந்துகொண்டு அவர் இருப்பை உணரக்கூடிய அந்த தன்னிருப்புக்கு [அதை ஆத்மா என்பார்கள் வேதாந்திகள்] தேசம் கிடையாது. ஊர் கிடையாது. உறவும் கிடையாது. ஆகவே அவர் இந்தியன் இல்லை. அவர் மனிதன்கூட இல்லை. அவர் ஒரு தன்னுணர்வு மட்டும்தான். இது இன்னொரு எல்லை. நாம் தேசம் பற்றிப்பேச ஆரம்பித்தால் இந்தக்குரலும்தான் சேர்ந்து எழுகிறது.

கேள்வி உண்மையில் நாம் யார் என்பதுதான். அந்தக்கேள்வியை ஏதேனும் ஒருவகையில் சிந்திப்பவர்கள் கேட்டுக்கொண்டிருப்போம். அதற்கு நாம் அளித்துக்கொள்ளும் வரையறை எதுவோ அதைச்சார்ந்தே நாம் நம்முடைய அடையாளத்தையும் நம்பிக்கைகளையும் அரசியலையும் கொண்டிருக்கிறோம்.

நவீன உளவியலில் ஒரு குழந்தை பதினெட்டு மாத அளவில்தான் தன்னை தனித்து உணர்கிறது என்று சொல்லப்படுகிறது. ழாக் லக்கான் அதை கண்ணாடிப்பருவம் [Mirror stage] என்கிறார். அதுவரைக்கும் குழந்தைக்கு தான் தனி என்று தெரியாது. தன்னையும் இன்னொருபொருளையும் அது பிரித்துப்பார்ப்பதில்லை. பதினெட்டு மாதத்தில் அது கண்ணாடியில் தன்னை அடையாளம் காண்கிறது. தன் பிம்பத்தைச் சுட்டிக்காட்டி ‘பாப்பா’ என்கிறது.

ஆனால் நம் சிந்தனை அப்படி இல்லை. வேதாந்தத்தின்படி தன்னுணர்வு என்பது பிறப்புக்கும் முந்தையது. கருப்பைக்குள் புகும் கணத்துக்கும் முந்தையது. அதை பார்த்திவப்பரமாணு என்கிறது வேதாந்தம். அது ஒரு அணு. அந்தப்பரமானுவுக்கு ஒரு தன்னுணர்வு உண்டு. அதை ஒரு பிரஜாபதி என்கிறது வேதம். அது ’நான் இருக்கிறேன்’ என உணர்கிறது. ’நான் வளரவேண்டும்’ என எழுகிறது. கருப்பைக்குள் புகுந்து அது தனக்கென ஒரு உடலை திரட்டிக்கொள்கிறது. அது அன்னம். பருப்பொருள். பிற அன்னத்தை உண்டு அது வளர்கிறது. வளர்ந்தபடியே இருக்கிறது.’

சைவ சித்தாந்தம் அந்த அணுவின் தன்னுணர்வைத்தான் ஆணவம் என்கிறது. பிறப்புக்கு முன்னரே உள்ள சுயப்பிரக்ஞை. அதைத்தான் ஆணவமலம் என்கிறது சைவம். பிறந்ததும் அம்மாவும் அப்பாவும் பிறந்த இடமும் ஊரும் உறவும் குலமும் உருவாகின்றன. அது கன்ம மலம். அந்த கன்மத்தையே முழுமுதல் உண்மை என நினைக்கும் மயக்கமே மாயாமலம் புதுமைப்பித்தன் அவரது கயிற்றரவு கதையிலே அழகாக அந்த சுய அறிதலைச் சொல்கிறார். தன்னுணர்வை , சுயத்தின் இருப்பைப்பற்றிய அற்புதமான சிறுகதை அது.

நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகிய நம்பியாபிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது.

”அப்பா யாரு?” என்று கேட்கிறார் அழகிய நம்பியாபிள்ளை.

குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது.

“முட்டாப் பயலே, நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம், பரமசிவம் பிள்ளை!” என்றார் அழகிய நம்பியா பிள்ளை. ”அப்பா யாரு?” என்றார் அழகிய நம்பியா பிள்ளை.

குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது.

”பரமசிவம் யாரு?” என்று கேட்டார் அழகிய நம்பியாபிள்ளை.

”நான்” எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை.

”போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!” எனக் குழந்தையை மெய்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்.

குழந்தை பரமசிவமாகி நான்-நீ-அவன் என்ற பேதாபேதப் பிரக்ஞையுடன் வாழையடி வாழையாக இருந்துவரும் விளையாட்டைக் கற்றுகொள்ள ஆரம்பித்தது.

இப்படி ஆரம்பிக்கிறது அந்த தன்னுணர்வு.

மனம் என்ற ஒன்று உடம்பைவிட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக்கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத்தானா… நான் பிறப்பதற்குமுன்… என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞையுண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப்பற்றியுள்ள சூழ்நிலைக்குத்தான் பிரக்ஞையுண்டா?

புதுமைப்பித்தனின் பரமசிவம் யோசிக்கிறார். சிந்திப்பதற்கு அருமையான இடம். பனைவிடலிக்கு அடியில் இளவெயிலில் மலம் கழிக்கையில். கூட எவருமே இல்லை. பின்பக்கம் மலம் தவிர. அது ஆணவமலமோ கன்ம மலமோ மாயாமலமோ இல்லை. வெறும் மலம். அங்கேதான் புதுமைப்பித்தனின் அழியாத புன்னகையைக் காண்கிறோம்.

அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது; மீனாயிற்று; தவளையாயிற்று; வாலிழந்தது; குரங்காயிற்று; சமாதி நிலையிலே உறங்க லாயிற்று… சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுக்கட்டாகக் காத்திருந்தது.

என்று சைவத்தின் அந்த ஆணவத்தரிசனத்தை அதியற்புதமாகச் சித்தரிக்கிறார் புதுமைப்பித்தன்.

அப்படிப்பிறந்துவருகிறோம் நாம். இந்த பயணத்தில் நாம் நம்முடையது என திரட்டிக்கொள்ளும் எல்லா பண்பாட்டு அடையாளங்களையும் அடைகிறோம். ’அம்மா பாலூட்டுவாள். அப்பா தூக்கிக் கொள்வார். வாத்தியார் அடிப்பார் சாமி கண்ணைக்குத்தும்’ என படிப்படியாக முன்னேறுகிறோம் என்கிறார் புதுமைப்பித்தன்.

நான் யார் என்று கேட்டால் இந்திய மரபு அளிக்கும் முதற்பதில் இதுதான். நான் ஆத்மா. நான் எனும் தூய இருப்பு. தன்னுணர்வு. இது ஒரு சிறப்புதளப் பதில் இதை விசேஷம் என்பார்கள். இன்னொரு பதில் உள்ளது. அன்றாடவாழ்க்கை சார்ந்த பதில். சாமானியதளம் என்பார்கள்.

நாம் விசேஷ தளத்தில் நம் மதம் சொன்ன பதிலையே சாமானியதளத்திலும் கொண்டோம். ஆகவேதான் தஞ்சை பெரியகோயிலை கட்டியவனை நாம் மறந்தோம். அதை நமக்குச்சொல்ல வெள்ளையன் வரவேண்டியிருந்தது. ஆனால் நாம் சைவசித்தாந்த்தை மறக்கவில்லை. சைவத்திருமுறைகளை மறக்கவில்லை.

நண்பர்களே, அது பெரும் பிழை. பரமார்த்திக தளத்தில் நாம் வேறு. ஆனால் சாமானிய தளத்தில் நாம் வரலாறு உள்ளவர்கள். பண்பாடு கொண்டவர்கள். மரபுள்ளவர்கள்.அரசியல் உள்ளவர்கள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதில் நாம் யார்?

ஓர் உச்சபட்ச தன்னறிதல் நிலையில் நாம் சர்வதேசியவாதிகள். மனிதர்கள். உயிர்க்குலத்தில் துளிகள். தூயதன்னிலைகள்> பிரம்மத்தின் வடிவங்கள். அதுவேறு. ஆனால் நாம் வாழும் அன்றாடதளத்தில் நாம் யார்? நம் அடையாளம் என்ன?

அங்கே நாம் நம்மை படிப்படியாக உருவாக்கிக் கொள்கிறோம். சின்னப்பாப்பாவிடம் பாப்பா எங்கே என்று கேட்டால் வயிற்றைத் தொட்டுக்காட்டுகிறது. பசிதான் அது அறியும் தன்னுணர்வு. அதுதான அடிப்படையானது. சின்னக்குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அடங்கிய ஓரு நூலைப்பார்த்தேன். குழந்தைகள் பெரும்பாலும் பாப்பா என்று ஒரு வயிற்றைத்தான் வரைந்திருந்தன. வயிற்றுக்கு கையும் காலும் தலையும் கோடுகளாக முளைத்திருந்தன.

ஆனால் கூடவே குழந்தைகள் சிறகுகளையும் வரைந்திருந்தன. உலகமெங்கும் குழந்தைகள் வரையும் முக்கியமான விஷயம் சிறகுகள். அம்மா அப்பாவுக்குப் பின் நம் பிள்ளைகள் காக்கா என்கின்றன. சிறகுகள் அவற்றை கவர்கின்றன. பறந்துசெல்லும் கனவு. வானம் என்னும் கனவு.

வயிறு என்ற யதார்த்ததுக்கும் சிறகுகள் என்ற கனவுக்கும் நடுவே நம் குழந்தைகள் தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. அதுதான் கடைசிவரைக்கும் சுயமாக வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

நண்பர்களே இதில் எங்கே வரலாறு வருகிறது? எங்கே நமக்கு வரலாறு அறிமுகமாகிறது? எப்படி நமக்குள் வரலாறு தேங்குகிறது? எந்தப்புள்ளியில் நாம் ஒரு தேசத்தின் வரலாற்றுடன் நம்மை இணைத்துக்கொள்கிறோம்? எப்போது நாம் தேசத்தின் ஒரு துளியாக ஆகிறோம்?

பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலே நமக்கு இந்தியவரலாறு ஆரம்பமாகிறதே அப்போதா? ‘அசோகர் சாலையோரத்திலெ மரங்களை நட்டார்’ என்று புத்தகத்தை மார்பில் அடித்துக்கொண்டு ‘தட்ட’ ஆரம்பிக்கிறோமே அப்போதா? அது தேர்வுக்குப்பின் அப்படியே மறந்துவிடுகிறதே.

நம்முள் உறையும் வரலாறு எது? தேசம் எது?

இந்தச் சுதந்திரநாளில் நாம் இங்கே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது.

*

என் சொந்த அனுபவத்திலிருந்து ஆரம்பிக்கிறேனே. அதுதானே நான் அதிகாரபூர்வமாகச் சொல்லத்தக்க ஒரேவிஷயம்? என் தன்னுணர்வு மிகமிக இளமையிலேயே என்னிடம் வந்தது என நான் உணர்கிறேன். என் தியானத்தில் நான் என்னை கைக்குழந்தையாக இருந்தபோது அறிந்த்தை மீண்டும் உண்ந்திருக்கிறேன். ஒரு பூனையை நான் தவழ்ந்துபிடிக்கசெல்வதை நானே கனவுபோலக் கண்டேன். அது நான் என்னை சிறப்புத்தளத்தில் உணர்வது.

வரலாற்றுணர்வு என்பது என் சாமானியதளத்தில் நான் அறிவது. நான் என்ற சமூக உணர்வு அல்லது வரலாற்றுணர்வு எனக்கு மெல்லமெல்ல பல அனுபவங்கள் வழியாக உருவாகி வந்தது. அதில் ஒரு தருணம் நினைவுக்கு வருகிறது.

என்னை மூன்றுவயதில் என் அப்பா திருவிதாங்கோடு என்ற ஊரில் உள்ள எங்கள் குடும்பவீட்டுக்கு அழைத்துச்சென்றாள். அங்கே எங்கள் குலதெய்வத்தின் கோயில் இருந்தது. அதை நாங்கள் தெற்கது என்போம். தெற்குப்பக்கம் சிறிய கட்டிடமாக அந்தக்கோயில் இருக்கும். கோயில் என்று சொல்வதெல்லாம் மிகை. குடும்பவீடே ஓலைவேய்ந்த இடிந்துபோன ஒரு பழைய கட்டிடம். இது ஒற்றை அறைகொண்ட ஒரு சிறு மண்கட்டிடம். அதை வருடம் ஒருமுறை மட்டுமே திறப்பார்கள். அன்று அந்த தெய்வத்துக்கு உதிரபலி கொடுத்து பூசை செய்வார்கள்.

உற்றமும் சுற்றமும் கூடி நின்றனர். செண்டை முழங்கிக்கொண்டிருந்தது. அந்தக்கோயிலின் கருவறை திறந்தது. பூசாரி உள்ளே ஒரு நெய்விளக்கை ஏற்றினார். நான் உள்ளே ஒரு கற்சிலையை எதிர்பார்த்தேன். ஆனால் சிறு சுடர் அசைவில் உள்ளே நான் கண்டது ஓர் ஓவியத்தை.

விசித்திரமான ஓவியம். வழக்கமான ஓவியம் அல்ல. நீலமும் காவியும் வெள்ளையும் கரியும் மட்டுமே நிறங்கள். சுவர் முழுக்க வரையப்பட்டிருந்தாலும் எந்த பிம்பமும் தெளிவாக இல்லை. ஒரு பெண் மையமாகத் தெரிந்தாள். நீலநிறமான முகம். பெரிய நீலநிற முலைகள். நீளமான நீலநிறக்கூந்தல். கண்கள் சிவப்பாக பெரிதாக இருந்தன. வாயில் பெரிய வெண்பற்கள். அவள் காலடியில் விதவிதமாக வரையப்பட்ட மிருகங்கள். அருள்கரம் இல்லை. புன்னகை இல்லை.

‘இது யார்?’ என்றேன் பீதியுடன்.

‘நம்ம குலதெய்வம்…நீலி ;என்றாள் அம்மா. ’கும்பிடு’

‘குலதெய்வம்னா?’ என்றேன்

‘நமக்கெல்லாம் அம்மா….நம்ம பாட்டி கொள்ளுப்பாட்டி எல்லாருக்கும் இவள்தான் அம்மா’

அந்த பேரன்னையை நான் பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தேன். இவள் யார்? பெரிய அன்னை! அபப்டிஎன்றால் சிலந்திமாதிரி எறும்புமாதிரி முட்டைகள் நிறைந்த பையை சுமந்து அலைந்திருப்பாள்.

‘இவள் எங்கே இருந்தாள்?’ என்றேன்

’நீலிமலைக்காட்டிலே..’ என்று அம்மா சொன்னாள் ‘ அவ கூந்தல் வானம் வரைக்கும் பறக்கும். அவ கால்வச்ச இட்த்திலே எல்லாம் செடிகள் முளைக்கும்’

அவ்வாறு எனக்குள் வரலாறு புகுந்தது. என் நிலமெல்லாம் நீலியின் பலவகையான தோற்றங்கள் கோயில் கொண்டிருக்கின்றன. நான் இன்றுவரை விதவிதமான கோணங்களில் நீலியைப்பற்றி எழுதியிருக்கிறேன். விஷ்ணுபுரத்தில், காடில், கொற்றவையில் நீலி வருகிறாள். ரப்பரிலும் பின் தொடரும் நிழலின் குரலிலும் இரவிலும் கூட அவள் இருக்கிறாள். என் கனவுகளில் அவளைக் கண்டுகொண்டே இருக்கிறேன். என் சுய அடையாளம் என்பது நீலியில் இருந்து ஆரம்பிக்கிறது

நண்பர்களே இதை என் குலவரலாறு என்று இடதுசாரி நண்பர் சொன்னார். எனக்குள் இருப்பது அது மட்டும்தான் என்றார். ஆனால் அப்படித்தானா? இதே கதையை இங்கிருக்கும் ஒவ்வொருவரும் சொல்லமுடியும். நம்முடைய வரலாறு இதுமட்டும்தானா?

*

நண்பர்களே, நான் இங்கே டி.எச் கோர்டான் [D. H. Gordon ] என்ற ஆங்கிலேயரைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். இந்தியக் குகை ஓவிய ஆராய்ச்சியில் முன்னோடியாக கோர்டான் சுட்டப்படுகிறார். இந்தியக் குகை ஓவியங்களை கால அடிப்படையில் அடையாளப்படுத்தும் முறையை அவர்தான் தொடங்கிவைத்தார் என்கிறார்கள். அவர் ஒரு ராணுவ வீரர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வுபெற்றார். 1958ல் வெளிவந்த அவரது The Prehistoric Background of Indian Culture என்ற நூல் இவ்வகையில் முன்னோடியானது
.
இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களை கண்டு அடையாளப்படுத்துவது அவரது பணியாக இருந்தது. இந்திய சுதந்திரத்துக்குப்பின்னர் லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியுடன் தொடர்புகொண்டு பணியாற்றினார். பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்கியாலஜியிலும் பணியாற்றினார் அவரது சேமிப்புகள் பிரிட்டிஷ் மியூசியத்திற்கு பின்னர் அளிக்கப்பட்டன

இந்தியாவின் முக்கியமான குகை ஓவியங்களை கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர் கோர்டான். தமிழகத்தில் அவர்காலகட்டத்திலேயே முக்கியமான குகை ஓவியங்கள் கண்டடையப்பட்டன. கீழ்வாலை, மல்லர்பாடி, கருக்கியூர் ஆகிய இடங்களில் உள்ள குகை ஓவியங்கள் மிக முக்கியமானவை. ஆம், இடதுசாரி நண்பர் சொன்னதுபோல நமக்கு நம்முடைய வரலாற்றின் ஆரம்பப்பாடத்தைக் கற்பித்தவர் அவர். நமக்கு அவர் குருநாதரின் இடத்தில் இருக்கிறார்.கோர்டானின் நூலைப்பின்பற்றி நான் இந்தியக்குகை ஓவியங்களைச் சென்று பார்த்திருக்கிறேன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சில நண்பர்கள் கருக்கியூர் குகை ஓவியங்களைச் சென்று பார்த்தோம். கோத்தகிரிக்குச் சென்று அங்கிருந்து செங்குத்தான மலைபபதையில் இறங்கி கருக்கியூர் குகைக்குச் சென்றோம். குகை என்று சொல்லமுடியாது. சரிவான ஒற்றைப்பாறை. ஒரு பெரிய மண்டபம் போல மழையிலிருந்து பாதுகாக்கக்கூடியது. ஐநூறுபேர் நனையாமல் நிற்கலாம். அந்தப்பாறைச்சுவர்கள் முழுக்க ஓவியங்கள். எட்டமுடியாத இடங்களுக்கெல்லாம் ஏறி வரைந்திருக்கிறார்கள். ஏணிகட்டிச்சென்றுதான அங்கே கயிற்றில் தொங்கியபடித்தான் அவற்றை வரையமுடியும். ஆம், அவற்றை வரைந்தவர்களுக்கு அவை அழியாமல் காலகாலமாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கிறது.

கருக்கியூர் தமிழ்நாட்டிலேயே பெரிய வரலாற்றுக்கு முந்தைய குகைஓவியத்திரள். தமிழின் முக்கியமான பண்பாட்டு ஆவணம் அவற்றில் மிகவும் மனதைக் கவர்ந்தது வரிசையாகச் செல்லும் காட்டுமாடுகளின் சித்திரம்தான். அந்த ஓவியங்களை நான் பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டு நின்றேன். காளைகளின் திமில்கள் வரையப்பட்டுள்ள அழகு. அந்த நடையில் தெரியும் திமிர். தமிழ்ப்பண்பாடு என நாம் இன்று அறியும் எதுவுமே உருவாகியிருக்காத காலகட்டத்தைச் சேர்ந்தவை அவை. குறைந்தது பத்தாயிரம் வருடப்பழைமைகொண்டவை! அவற்றை வரைந்த மக்கள் யார், என்ன மொழி பேசினார்கள் , எப்படி வாழ்ந்தார்கள் எதுவும் நாமறியமுடியாது. நமக்குக்கிடைப்பவை அந்த ஓவியங்கள் மட்டுமே

ஆனால் நம்ப மாட்டீர்கள். அந்த ஓவியங்கள் எனக்கு மிகமிக அருகே இருந்தன. உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் வீட்டுப்பாட்டியோ தாத்தாவோ ஆறுமாதம் முன்னால் வரைந்த ஓவியங்கள் போலவே அவை தோன்றும். உதாரணமாக மனிதர்கள் ஒன்றாகக் கூடி ஒரு காளை மாட்டைப்பிடிக்கும் சித்திரம். இது இன்றும் நீளக்கூடிய ஜல்லிக்கட்டு மாதிரியே இருக்கிறது. சுதந்திரமாக அலையும் காட்டுமாடை சூழ்ந்துகொண்டு வேட்டையாடிய மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைப் பிடிப்பதை ஒரு விளையாட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த விளையாட்டு இன்றுவரை நம் பண்பாட்டின் அடையாளமாக நீடிக்கிறது

பெண்கள் கூட்டமாக கைகளை தோளோடு சேர்த்துக்கொண்டு நடனமாடும் ஒரு சித்திரமும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. இந்த நடனம் இன்றும் தமிழகத்தின் பழங்குடிகளால் ஆடப்படுகிறது. தமிழ்ச்சமூகத்தில் சில குறிப்பிட்ட தருணங்களில் ஒரு சடங்குகலையாக இது நீடிக்கிறது. உதாரணமாக ஒப்பாரி பாடும்போது இப்படி தோளோடு தோள் கோர்த்துக்கொண்டு முன்னும்பின்னும் ஆடியபடி அழுதபடி பாடுவதுண்டு

அன்றிரவு தெங்குமராட்டா வனவிடுதியில் என் மனம் தூக்கத்தில் மயங்கத்தொடங்கியபோது அதை உணர்ந்தேன். அந்த ஓவியங்கள் எனக்கு மிகமிக நன்றாக அறிமுகமானவை! ஆம் அந்த ஓவியங்களின் அதே பாணியில்தான் என் குலதெய்வக்கோயிலின் நீலியும் வரையப்பட்டிருந்தாள்!

வரைந்தவர்கள் யார்? அவர்கள் புள்ளுவர்கள் என்னும் பாடகர்க்குடிகள். பழங்குடி வாழ்க்கை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் மாறாத மரபுப்படி அவற்றை வரைந்தார்கள். புள்ளுவர்களுக்குரிய கலை களமெழுதிப்பாட்டு என்பது. மண்ணில் பெரிய களமுற்றம் ஒன்றை அவர்கள் வரைகிறார்கள். கரிப்பொடி சுண்ணாம்பு செம்மண்பொடி நீலப்பாறைப்பொடி ஆகியவற்றால் வரைகிறார்கள். சிலசமயம் நூறடி அகலமும் நீளமும் கூட அந்த தரை ஓவியத்துக்கு இருக்கும். அதன்முன் அமர்ந்து குடம் என்னும் வாத்தியத்தை வாசித்து நீலியின் கதையை பாடுவார்கள்!

காலையிலேயே வரைய ஆரம்பித்த ஓவியம் அது. இரவில் அது பந்த ஒளியில் ஒரு மகத்தான கனவுபோலிருக்கும். அந்த ஓவியத்துக்குத்தான் பூசைகள் , பலிகள் எல்லாமே. பாடலின் கடைசியில் புள்ளுவத்தி சன்னதம் வந்து ஆடி கமுகப்பூக்குலையால் அந்த ஓவியத்தை அழிப்பாள். கண்ணெதிரே ஒரு கனவுபோல அந்த ஓவியம் அழிந்து மறையும்! அது அப்படி மறைவதனால்தான் மகத்தான கனவாக ஆகிறது!

கருக்கியூர் முதல் அறுபடாமல் வந்திருக்கிறது அந்த ஓவியமரபு. அந்த நம்பிக்கை! நண்பர்களே நீலி யார்? அவள் வனத்தின் தெய்வம். காட்டையே ஒரு பேரன்னையாக கொண்டால் அவள்தான் நீலி. நீலநிறமானவள். நீலக்கூந்தல் கொண்டவள். நீலகேசி! எங்கோ எப்போதோ ஏதோ மூதாதை காட்டை ஒரு கன்னியாக அன்னையாக கண்டடைந்தான். காட்டாறு போன்ற கூந்தலும் மரக்கூட்டங்கள் போன்ற உடலும் தீத்தழல் போன்ற கண்களும் புலியின் பற்களும் கொண்ட பெண்ணாக.

அப்போது நம்முடைய இந்த நாகரீகமே உருவாகியிருக்காது. அந்த பிம்பம் மட்டும் நம் கனவில் சேமிக்கப்பட்டிருந்தது. நம் குகைகளில் வரையப்பட்டிருந்தது. புறநாநூற்றில் அவளைப்பற்றி தொல்கபிலர் பாடுகிறார் ‘குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவை’ என்று

பாவை என்றால் ஓவியம். தமிழகத்தின் புராதனமான வழிபாடு ஓவிய வழிபாடுதான். அதன்பின்னர்தான் சிலைவழிபாடு வந்தது. தொல்கபிலருக்கே அது பழையமையான தமிழர்களின் பெயர்தெரியாத பெண் தெய்வமாக இருந்தது .

ஆனால் அவள் இருந்துகொண்டே இருந்தாள். சமணம் வந்தபோது அவள் சமணத்துக்குள் புகுந்தாள். கேசி என்ற பெயர் சமணத்தில் அடிக்கடி தென்படுவது. நீலகேசி என பல சமண முனிவர்கள் இருந்திருக்கிறார்கள். நீலிக்கு நூற்றுக்கணக்கான கதைகள் தமிழகத்திலே உள்ளன. பழையன்னூர் நீலி, கள்ளியங்காட்டு நீலி, மேலாங்கோட்டு நீலி, இட்டகவேலி நீலி…..நீலகேசி சமணத்தால் உருவாக்கப்பட்ட ஐஞ்சிறு காப்பியங்களில் முக்கியமானது. அதில் நீலி சமணமுனிவரால் ஞானம் பெற்று பிறசமயங்களை வாதில் வென்றபின் அருகன் அடி சேர்கிறாள்.

சமணம் மறைந்தது. இன்று மீண்டும் சிறுதெய்வமாக கோயில்களில் குடிகொண்டிருக்கிறாள் நீலி. குலக்கோயில்களில் ஓவியங்களாக. பெருந்தெய்வக்கோயில்களின் வெளிச்சன்னிதிகளில் சிறு கற்சிலையாக. கள்ளிப்புதர் மண்டிய காட்டுவெளிகளில் குங்குமமும் செம்பட்டும் காய்ந்தமாலையும் அணிந்து நடுகற்களாக நின்றுகொண்டிருக்கிறாள்.

அத்தகைய வனக்கோயில்களில் ஒன்று குமாரகோயில் செல்லும் வழியில் , வேளிமலை அடிவாரத்தில் உள்ள மேலாங்கோட்டு நீலி. அக்கா தங்கை என இரு கோயில்கள். அக்கா செண்பக யட்சி என்றும் தங்கை உம்மிணித்தங்கா என்றும் சொல்லப்படுகிறார்கள்.

நாற்பது வருடங்களுக்கு முன் அப்பகுதி மனித நடமாட்டமே இல்லாமலிருக்கும். வெறும் கள்ளிப்புதர்க்ள். வெறுமை. ஓங்கி உயர்ந்த வேளிமலைச்சரிவிலிருந்து வீசும் காற்றில் இலைக்கள்ளிகளின் இலைகள் நிறம் மாறிக்கொந்தளிக்கும். அது ஒரு மயானநிலம்.

அப்பகுதி முழுக்கவே நடுகற்கள்தான். பல காலகட்டங்களைச்சேர்ந்த நடுகற்கள். பல குடும்பங்களைச்சேர்ந்தவை. அவற்றுக்கு வருடத்திற்கு ஒருமுறை கோழிவெட்டி பலி கொடுத்து பூசை செய்வார்கள். செம்பட்டு சுற்றி அவை காற்றில் சீறி நின்றிருக்கும்

நடுவே ஒரு சிவன்கோயில். சோழர்காலகட்டத்தில் கட்டப்பட்டது. கல்லாலான உயரம் குறைந்த பழைமையான கட்டிடம். அக்கோயிலின் பின்பக்கம் அரைமதிகட்டப்பட்ட ஒரு சிறு வளைப்பு. அதற்குள் ஒரு பாலைமரம். பாலைநிலத்தின் மரம் அது என்று சங்க இலக்கணம் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். அந்தப்பாலை மரத்தின் அடியில் ஒரு சாண் கனமும் நான்கடி அகலமும் பத்தடி உயரமும் கொண்ட சப்பையான நாலைந்து கற்கள் நடப்பட்டவையாக நிற்கும். முதிய ஈறில் இருந்து பற்கள் நீட்டி நிற்பதுபோல!

நான் அந்தக்கோயிலுக்குச் சென்றபோது ஆறுவயது. என் கையைப்பிடித்தபடி சுகேசினி அக்கா என்னைக்கூட்டிச்சென்றாள். வழியெல்லாம் எனக்கு நெல்லிக்காயும் புளிச்சிக்காயும் வாங்கித்தந்தாள். என் சட்டை பித்தான் துளையில் மரிக்கொழுந்து வாங்கி சூட்டினாள். என் தலை கலையும்போது கோதிவிட்டாள். அவள் தலையின் காய்ச்சப்பட்ட தேங்காயெண்ணை வாசனை என்னை கிறங்கச்செய்தது. அவள் புடவையின் சரசரப்பு என்னுடன் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருந்த்து. ப்ல வடிவங்களில் என் கதைகளில் வரும் அக்கா அவள்தான்.

மேலாங்கோட்டு நீலிக்கு முன் பொங்கல் படையலிட்டு பூசை செய்தோம். பின்னர் சுற்றுவழியாக அந்த செங்குத்துக்கற்கள் நிற்கும் இடம் வழியாக வந்தோம். சட்டென்று அக்காவின் கை நடுங்குவதை உணர்ந்தேன். நான் அண்ணாந்து பார்த்தபோது அவள் வலிப்பு வந்தவளாக அதிர்வதைக் கண்டேன். ஒரு பயங்கர ஊளை. இரு கைகளையும் தூக்கி அக்கா சன்னதம் கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள். விழித்த கண்கள். கலைந்து பறந்த தலை

‘நீலியில்லா வந்துபோட்டா!’ என்றாள் அத்தை. நான் பீதியுடன் விலகி சுவரோடு ஒட்டி நின்று பார்த்தேன். ஆம் ஓவியங்களில் நான் கண்ட நீலி. குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவை! சமணமுனிவர் கண்ட நீலகேசி! அவள் கண்கள் ஓவியக்கண்கள் போலிருந்தன. எவரையும் பார்க்காமல், காலத்துக்கு அப்பால் வெறித்தன.

ஆனால் ஏன் அந்தக்கற்கள் முன் அவள் வந்தாள்? அந்தக்கற்கள் எவை? அவற்றை நாட்டியவர்கள் யார்?

*

நண்பர்களே , மீண்டும் ஒரு வெள்ளையரைப்பற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. ராபர்ட் புரூஸ் பூட். தமிழக வரலாற்றெழுத்தை அவரிடமிருந்து தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். இங்கிலாந்தில் உள்ள முக்கியமான பிரபுவம்சத்தைச் சேர்ந்தவர் ஃபூட். சிப்பாய்க்கலகம் முடிந்து ராணி விக்டோரியா இந்தியாவை நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பிப்பதற்கு இரண்டுமாதம் முன்பு செப்டெம்பர் 28 ஆம்தேதி ஃபூட் இந்தியாவில் இளம் நிலவியளாளராக வந்துசேர்ந்தார்.

பூட் நிலவியல் ஆராய்ச்சியைவிட வெயில் விரிந்த இந்திய நிலப்பகுதியின் அழகை ரசிப்பதிலேயே அதிகம் ஈடுபட்டிருந்தார் என்று தெரிகிறது. கன்யாகுமரி அம்மன் கோயிலை அவர் பேனாக்கோடுகளால் ஓவியமாக வரைந்திருக்கிறார் . அவர் தன் நிலவியல் ஆராய்ச்சிகள் பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகள் [ Geological Features of the South Mahratta Country and Adjacent Districts 1876] ] மிக முக்கியமான ஒரு நூலாக இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது

1863 மே 30 ஆம் தேதி ராபர்ட் புரூஸ்பூட் சென்னை பல்லாவரம் அருகே நிலவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது தமிழ்வரலாற்றை ஆரம்பிக்கவேண்டிய முதல் புள்ளியைக் கண்டுபிடித்தார். அது வழவழப்பான படிகக்கல்லால் ஆன ஒரு கைக்கோடாரி.

கூம்புவடிவமான அந்தக்கல் ஒரு பழமையான கல்கோடாரி என்று ஃபூட் கண்டுபிடித்ததற்கு அவர் ஒரு நிலவியலாளராக இருந்ததும் ஏற்கனவே அவர் கல்லாயுதங்களைப்பற்றி அறிந்திருந்ததும்தான் காரணம். அதன்பின் ஃபூட்டும் அவரது தோழர் கிங்கும் இணைந்து வடதமிழகத்தில் பாலாறுபடுகை முழுக்க பழங்கால கல்லாயுதங்களுக்காக தேட ஆரம்பித்தனர். அந்தப்பயணம் அவர்களை ஆதிரம்பாக்கம் என்ற கிராமத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்தாளயாறு படுகையில் உள்ளது ஆதிரம்பாக்கம். தமிழக வரலாற்றை ஒரு பெரிய மாளிகை என்று சொன்னால் அதற்குள் நுழைவதற்கான வாசலே இந்த சின்ன கிராமம்தான் என்று சொன்னால் மிகையல்ல.

ஆதிரம்பாக்கத்தில் ஃபூட்டும் கிங்கும் பலவகையான கல்லாயுதங்களைக் கண்டுபிடித்தனர். அதன்பின்னர் இந்த நூறாண்டுக்காலத்தில் தொடர்ச்சியாக ஆதிரம்பாக்கம் தமிழக கற்காலத்தைப்பற்றிய ஆராய்ச்சிக்கான களமாக இருந்துள்ளது. 1938 முதல் ஆய்வாளர் கிருஷ்ணசுவாமி இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறார்.1999 முதல் சாந்தி பாப்பு தலைமையில் மேலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன

ஆதிரம்பாக்கம் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய புத்தகம்போன்றது. இந்த புத்தகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. பழையகற்காலம் நடுக் கற்காலம் புதியகற்காலம் என்று மூன்றுகாலகட்டங்களைச் சேர்ந்த கல்லாயுதங்களும் எலும்புகளும் இங்கே கிடைத்துள்ளன. இந்தியாவின் கற்கால மனிதர்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்த இடம் இது.

ஃபூட் கண்டுபிடித்த அந்த கற்கோடாலி இன்று தமிழ்மண்ணின் பழையகற்காலத்தைச்சேர்ந்தது என்று வரையறைசெய்யப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் அவ்வாறு பல பொருட்கள் சிதறிக்கிடப்பது ஏற்கனவே உள்ளூர்க்காரர்கள் அறிந்திருந்ததுதான். ஆனால் அவற்றை கொஞ்சநாளுக்கு முன்னால் யாராவது செய்திருப்பார்கள் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அந்த கோடரிகள் செய்யப்பட்டு ஐந்துலட்சம் வருடங்களுக்கு மேல் ஆகியிருகலாம் என அவர்கள் ஊகித்திருக்க மாட்டார்கள். தமிழர்களாகிய நம் மூதாதையர் தங்கள் கைகளால் செய்த பொருட்களில் நமக்குக்கிடைக்கக்கூடிய மிகப்பழைய பொருட்கள் அவைதான்

ஆனால் அவர்களை தமிழர்கள் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போது தமிழ் உருவாகியிருக்கவில்லை. மனித மொழி உருவாகியிருந்ததா என்றே சந்தேகம்தான். ஏனென்றால் அவர்கள் நம்மைப்போன்ற மனிதர்கள் அல்ல. நம்மைவிட பரிணாமத்தில் ஒருபடி பின்னால் நின்றவர்கள். அவர்கள் விட்டுச்சென்ற இந்த ஆயுதங்களையும் சில எலும்புத்துண்டுகளையும் தவிர நமக்கு அவர்களைப்பற்றிக் கிடைக்கும் தகவல்கள் ஏதுமில்லை.

ஆனால் இந்த ஆயுதங்களைக் கொண்டு பலவிஷயங்களை ஊகிக்க தொல்மானுடவியல் ஆய்வாளர்களால் முடியும். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய மக்களுக்கு சாதாரண கடினமான கருங்கல்லில் இருந்து இன்னொரு கருங்கல்லைக்கொண்டு ஆயுதங்களைச் செய்ய தெரியாது. அதாவது இவர்கள் மற்ற இடங்களில் உள்ள கற்காலத்தைவிட பழைய காலத்தைச்சேர்ர்தவர்கள். கல்லை வெட்டவும் கூராக்கவும் இவர்கள் முயலவில்லை. படிகக்கல் இயற்கையாகவே கூர்மையானது. அதை உடைத்துப்பிளந்து எடுப்பதும் சுலபம். எளிய தொழில்நுட்பத்தைக்கொண்டே கத்திகள், கோடரிகளை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

இந்த எளியமுறையை அச்சூலியன் முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள். சென்னையை ஒட்டிய பகுதிகளில் ஃபூட்டும் அவரது சக ஆய்வாளரான கிங்கும் கண்டுபிடித்த கல்லாயுதங்களை அச்சூலியன் முறையைச்சேர்ந்த மெட்ராஸ் கைக்கோடாரி மரபு [Madras Handaxe Tradition”] என்று இன்றைய ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன

ஃபூட் அவரது கண்டுபிடிப்புகளை முறையான ஆய்வுக்குறிப்புகளுடன் சேர்த்துவைத்தார். அவரது சேமிப்புகள் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.எளிதில் உடையக்கூடிய படிகப்பாறைகளைக்கொண்டு எந்தவிதமான தேர்ச்சியும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் இந்த கல்லாயுதங்களை இன்று அருக்காட்சியகத்துக்கு வரும் மக்கள் பெரிய ஆர்வமில்லாமல் பார்த்துச்செல்கிறார்கள். அவற்றில் அவர்களை திகைக்கவைக்கக்கூடிய எதுவும் இல்லை. அவற்றில் இருந்து அவற்றைச் செய்த மனிதர்களைப்பற்றி ஊகிப்பதற்கு கற்காலவரலாறு பற்றிய விரிவான அறிவுதேவை.

ஆனால் கொஞ்சம் கற்பனை இருந்தால் ஒன்றை சிந்திக்கலாம். இந்த எளிமையான கற்கருவிகளில் இருந்துதான் தமிழ்பண்பாட்டின் தனியடையாளமாக இன்றும் நாம் பெருமிதம் கொள்ளும் ஒரு கலை பிறந்தது, கருங்கல்சிற்பக்கலை, கருங்கல் கட்டிடக்கலை. ஓங்கி நிற்கும் தஞ்சை ராஜகோபுரமும், ராமேஸ்வரம் பிரகாரமும், கிருஷ்ணாபுரம் சிற்பங்களும் எல்லாம் அந்த பயிற்சியற்ற காட்டுமனிதனின் பயிற்சியற்ற கரங்களில் இருந்து உருவானவைதான்.

தமிழகத்தின் கற்காலத்தின் முடிவில் உருவானது பெருங்கற்காலம். கல்லைக்கொண்டு ஆயுதம் செய்த நம் முன்னோட் கல்லை நினைவுச்சின்னமாக ஆக்கலாமென கண்டுகொண்டபின் உருவானது இக்காலம் .இறந்துபோன மூதாதையர் நினைவுக்காக மாபெரும் கற்களை மண்ணில் நாட்டினார்கள் இந்த மக்கள். அவை இன்றும் உள்ளன. பெங்கல் வட்டங்கள், பெருங்கல் அடுக்குகள், பெருங்கல் குவியல்கள், குடைக்கற்கள் என பலவகைகளில் அவை உள்ளன. அவற்றைச்செய்த மூதாதையரை நாம் அறியமாட்டோம்.

தமிழகத்தில் பெருங்கற்கால நினைவிடங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆமூர், அரையப்பாக்கம், அச்சரவாக்கம், அய்யனேரி,எச்சூர்,எடக்குன்றம்,எலச்சூர், எருமையூர், கூடலூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மச்சத்திரம், அன்னவாசல், பேட்டை பெருங்களத்தூர், பெயல், பொய்யாமனை போன்ற ஊர்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பம்மடுக்குளம், பாஞ்சாலி, பொட்டூர் புழல் போன்ற ஊர்களிலும் கண்டடையப்பட்டுள்ளன. இந்திய தொல்பொருள்துறை கிட்டத்தட்ட நூறு ஊர்களில் பெருங்க்ற்கால கல்லடையாளங்கள் உள்ளன என்று அடையாளப்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் மறையூர் புராதன பெருங்கல் நினைவிடங்களுக்கு முக்கியமான இடமாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவடைப்பு பெருங்கற்கால புதைவிடங்கள் பல உடையது. மறையூரின் குடைக்கற்கள் முன் நிற்கையில் நினைத்தேன். அந்த கற்களை நாட்டியவர்கள் எவ்வளவு உழைப்பைசெலுத்தியிருக்கிறார்கள்! எந்தவிதமான தொழில்நுட்பமும் இல்லாமல் அவ்வளவுபெரிய கல்லை அந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்வளவு ஆழமாக அவற்றை நாட்டியிருப்பதைக் கண்டால் அவர்கள் அவை காலகாலமாக நிற்கவேண்டும் என நினைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது!

அன்று நான் கண்டுகொண்டேன். சுகேசினி அக்கா சன்னதம் கொண்ட அந்த இடத்தில் நிற்பவை குறைந்தது ஐம்பதாயிரம் வருடம் முன்பு என் முதுமூதாதையர் நாட்டிய பெருங்கற்கள்! ஐம்பதாயிரம் வருடம் முன்பு அந்த முன்னோர் எதிர்காலம் நோக்கிச் சொன்னதை இங்கே இந்த முனையில் நின்று அவள் ஆழ்மனம் கேட்டுக்கொண்டது.

*

நண்பர்களே! நான் கேட்கவந்த கேள்வி இதுதான். என்னுடைய வரலாற்றுணர்வு எது? எவரால் உருவாக்கப்பட்டது?

என் வரலாற்றுணர்வு என் குலக்குழு சார்ந்தது மட்டும்தானா? அது குகை ஓவியங்களுடனும் பெருங்கற்களுடனும் என்னை நேரடியாகப்பிணைக்கிறதே. நான் என்று என்னை உணரும்போது என்னுடைய குடும்பத்தை, சாதியை நான் உணரவில்லை. இந்த மண்ணின் பலலட்சம் வருட வரலாற்றைத்தானே உணர்கிறேன்?

இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரும் யோசித்துப்ப்பாருங்கள். உங்கள் குலதெய்வத்தை நீங்கள் பார்க்கும்போது நீங்கள் தரிசிப்பது பல லட்சம் ஆண்டுகளாக உருவாகி வந்த ஒரு பண்பாட்டை அல்லவா? அந்த வரலாறுதானே உங்களுக்குள் உள்ளது?

நமக்குள் உள்ள இந்த வரலாற்றுணர்வை உருவாக்கியவர்கள் வெள்ளை ஆய்வாளர்களா என்ன? இல்லை. நம் மொழி. நம் பண்பாடு. நம் மதம். இல்லையா? அந்த வரலாறல்லவா நமக்குள் நிலத்தடி நீர் போல உள்ளது?

அப்படியென்றால் ராபர்ட் புரூஸ் பூட்டும் , டி.எச்.கோர்டானும் நமக்கு தொடங்கி அளித்த வரலாறுதான் என்ன? அவர்களை புறக்கணித்துவிடலாமா என்ன? ஒருபோதும் முடியாது. அவர்கள் நம் ஆசிரியர்கள். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

நண்பர்களே, இந்த வெள்ளைய ஆய்வாளர்கள் நமக்கு அளித்துள்ள வரலாறு என்பது புறவரலாறு. நாம் நமக்குள் கொண்டிருக்கும் வரலாறு என்பது அகவரலாறு. கொங்குமண்ணைப்பற்றிய முதல் வரலாற்று எழுத்து கர்னல் மன்றோ எழுதிய குறிப்புகளில் உள்ளது. அதன் வழியாக ஒரு நவீன புறவரலாறு உங்களுக்குக் கிடைக்கின்றது. ஆனால் கொங்குமண்ணின் வரலாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளே உறைந்துள்ளது. மொழிவடிவில், படிமங்களாக, கனவுகளாக அது உள்ளது

நமக்குள் உள்ள வரலாற்றை வெளியே கண்டுகொள்ள அவர்களின் வரலாறு உதவுகின்றது. நமக்குள் உள்ள அகவரலாறு வண்ணங்களை அளிக்கிறது. அவர்கள் அளித்த புறவரலாறு சுவரை அளிக்கிறது. நாம் வரலாற்றுச்சித்திரத்தை வரைகிறோம்.

நம்முடைய புறவரலாறு என்பது இன்றும்கூட முழுமையாக இல்லை. நம் வரலாற்றுக்கு முந்தையகாலம் ஆதிச்சநல்லூர் வரை வருகிறது. அதன்பின் ஆயிரம் வருடம் கழித்து நம் வரலாற்றுக்காலமான சங்க காலம் தொடங்குகிறது. நடுவே ஒரு பெரிய இடைவெளி. அகழி. ஆதிச்சந்ல்லூருக்கு ஏராளமான தொல்லியல் சான்றுகள் உள்ளன. ஆனால் இலக்கியம் இல்லை. சங்ககாலத்துக்கு நிறைய இலக்கியம் உள்ளது. ஆனால் தொல்லியல்சான்றுகள் மிகமிகக்குறைவு. இன்று வரை இதை விளக்கமுடியவில்லை

அதன்பின் பல இடைவெளிகள். களப்பிரர் காலம், முதற்கால பல்லவர்காலம் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. சேரர்களின் பிற்கால வரலாறு பற்றி அனேகமாக ஒன்றும் தெரியாது. மதுரையை ஆண்ட சுல்தான்களின் பெயர்கள் மட்டுமே தெரியும். பல இடைவெளிகள். பல அகழிகள்

ஆனால் நம் அக வரலாறு அறுபடாமல் தொடர்ச்சியாக உள்ளது! புறவரலாறு ஒரு குதிரை. அது அகழிகளில் திகைத்து நிற்கிறது. அகவரலாறு ஒரு பறவை. அது எளிதில் பறந்து வந்துவிடுகிறது

நமக்கு வரலாறை எவரும் உருவாக்கி அளிக்கவில்லை. வரலாற்றை புறவயமாக எழுதும் முறையை நமக்கு வெள்ளைய அறிஞர்கள் கற்பித்தனர், அவ்வளவுதான். அதுவே அந்த இடதுசாரி நண்பருக்கு நான் சொன்ன பதில்

*

உடனே அடுத்த வினா. அந்த வரலாற்றுத் தன்னுணர்வு தேசமென்ற தன்னுணர்வாக இருந்திருக்கிறதா? அது சிறிய வட்டார உணர்வாக மட்டுமல்லவா இருந்திருக்கிறது?

பெருங்கற்காலத்துக்கே செல்வோம். இந்தியாவின் நிலப்பகுதி முழுக்க பெருங்கல் சின்னங்கள் உள்ளன. ராஞ்சியில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள சோகாட்டு இந்தியாவின் மிகப்பெரிய பெருங்கற்கால புதைவிடம் . முண்டா பழங்குடிமொழியில் மரணத்தின் இடம் என்று இதற்குப்பெயர் பிரமிக்கவைக்கும் அளவுகளில்இங்கே கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. நாக்பூர் அருகே ஜூனாபானி என்ற இடத்தில் மட்டும் ஏறத்தாழ முந்நூறு பெருங்கல் வளையங்கள் உள்ளன

வடக்கே காஷ்மீரில் உள்ள புர்ஜஹோம் முதல் தெற்கே கர்நாடகத்தில் உள்ள விபூதிஹள்ளி, நிலுரல்லு வரை பெருங்கற்கள் உள்ளன. கிழக்கே ஷில்லாங் அருகே உள்ள நார்டியாங் முதல் மேற்கே சிந்துவரை பெருங்கற்கள் உள்ளன. எல்லாமே ஒரே வகை, ஒரே அமைப்பு. ஆம், நாடு என்ற சொல் உருவாவதற்கு முன்னரே பண்பாடு ஒன்றாகக்கலந்துவிட்டது. கலந்து இணைந்துதான் அது வளர்ந்தது. நான் என் குலதெய்வச்சன்னிதியில் கண்ட அந்த பெருங்கல் இந்தியா முழுக்க ஒரே பண்பாட்டின் துளி. காஷ்மீரின் புர்ஜஹோமிலும் அஸாமில் நார்டியாங்கிலும் உள்ள பெருங்ற்களில் ஒன்று

அதை என் அகம் அறியும். நான் புர்ஜஹொமிலோ நார்டியாங்கிலோ விபூதிஹள்ளியிலோ சென்று நின்றால் எந்த வரலாற்றாசிரியனும் சொல்லாமலேயே இது என் பாரம்பரியம் என்றே உணர்வேன். அந்த உணர்வை புறவயமான உண்மையாக நிறுவத்தான் எனக்கு வெள்ளைய வரலாற்றாசிரியர்கள் சொல்லித்தந்திருக்கிறார்கள்.

பெருங்கற்காலத்துக்குப்பின் வந்த ஹரப்பன் நகரங்கள் உருவாயின. ஹரப்பன் நகர நாகரீகம் பல காலகட்டங்களாக பல ஆயிரம் வருடம் நீடித்த ஒன்று என்பதுதான் இன்றைய ஆய்வுமுடிவாகும். பாக்கிஸ்தானில் உள்ள மேஹ்கர் [Mehrgaŕh] ஹரப்பன் நாகரீகத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த நகரம். உலோக காலகட்டத்தின் தொடக்கத்தில் இது அமைந்திருந்தது. கடைசிக்காலகட்டத்தை சேர்ந்த ஹரப்பன் நகரம் என்று குஜராத்தில் உள்ள லோத்தலைச் சொல்லலாம்

இந்தியநிலத்தில் மிகப்பழைமையான நகரம் என்பது டோலாவீரா தான். அது ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்தது, ஹரப்பாவை விடப்பழையது. அதேபோன்ற ஏராளமான நகரங்கள் இன்று அகழ்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர் ஜெ.பி.ஜோஷி [ J.P.Joshi] ஹரப்பன் நாகரீகம் தரைவழியாகவே குஜராத்தின் கட்ச் வளைகுடா வரை பரவியிருந்தது என்று நிரூபிக்கும் 17 முக்கியமான புதைநகரங்களை பட்டியலிட்டார். இன்று அந்த எண்ணிக்கை மேலும் பலமடங்காகப்பெருகியுள்ளது

லோதல் , காளிஃபங்கன் [Kalibangan ], ] சமீபத்தில் குஜராத் கட்ச் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நகரமான கிராசாரா [Khirasara] போன்றவை பெரிய நகரங்கள். ஹரியானாவில் உள்ள பனாவலி [ Banawali] ஃபிரானா [Bhirrana][ உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரகோன் [ Bargaonதெற்கே மகாராஷ்டிரத்தில் உள்ள டாமியாபாத்[ Daimabad] வரை ஹரப்பன் நாகரீகத்தின் தொடர்ச்சி உள்ளது .ஏறத்தாழ 1,260,000 சதுரகிலோமீட்டர் அகலமுள்ள ஹரப்பன் பண்பாட்டுவெளி உலகின் மிகப்பெரிய நாகரீகம் .

மகராஷ்டிரத்தில் நாக்பூர் அருகே உள்ள மஹுர்ஜாரி[ Mahurjar]i ப்குதியில் தொடர்ந்து அகழ்வாய்கள் மூலம் புதியகற்காலம் முதல் உலோகக் காலம் வரையிலான தொல்பொருட்க்ள் கண்டடையப்படுகின்றன.

ஆந்திராவில் உள்ள நாகார்ஜுனகோண்டா புதியகற்காலம் முதலே முக்கியமான வாழ்விடமாக இருந்திருக்கிறது என்பதற்கான புதைபொருட்சான்றுகள் கிடைத்தபடி உள்ளன. கர்நூல் மாவட்டத்தில் உள்ள சதனிக்கோட்டா [Satanikota] என்னுடமிடத்திலும் பழையகற்காலம் முதல் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கர்நாடகத்தில் சித்ரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரியில் முதல்கற்காலமுதல் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஹரப்பா காலகட்டத்தின் கடைசிப்பகுதியைச்சேர்ந்த பண்பாட்டுக்கூறுகள் சில அகழ்வாய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் புராதன இடுகாடு ஒன்று கண்டடையப்பட்டது. அந்த இடுகாட்டுக்கு அருகே ஒரு நகரம் இருந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. சமீபத்தில் அகழ்வு செய்யப்பட்ட கொடுமணல் பெருங்கற்காலம் முதலே இருந்து வந்த நகரம் என ஊகிக்கிறார்கள்.

அதாவது இன்றைக்கு நாம் பொடிநடையாகக் கிளம்பினால் தெற்கே ஆதிச்சநல்லூரில் இருந்து கொடுமணல் வழியாக நாகார்ஜுனகோண்டா சென்று அங்கிருந்து சதனிக்கோட்டா வழியாக மஹுர்ஜாரி சென்று டாமியாபாத் வழியாக லோதல் வழியாக காளிஃபங்கன் சென்று மொகஞ்சதாரோ போய்விடலாம். கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டருக்கு ஒரு புதைநகரம் இருக்கிறது. இந்திய நிலம் முழுக்க ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றி ஒன்றுடன் ஒன்று வியாபாரம் செய்து வளர்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான புராதன நகரங்களால் ஆன ஒரே பண்பாட்டுப்படலம் இருந்துள்ளது என்பதுதான் உண்மை.

நாம் அந்தப் பண்பாட்டுவெளியை நமக்குள் கொண்டிருக்கிறோம். இதோ என்னுடைய குலதெய்வமாக இருக்கும் நீலி. இவளை இவ்வடிவுக்கு ஆக்கிய சமணம் வட இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள பாலிதானா என்ற குன்றில் வாழ்ந்த சமணத்தீர்த்தங்காரரான ஆதிநாதரின் ஞானத்தால் கட்டமைக்கப்பட்டவள்.

இந்த தன்னுணர்வுதான் நானறியும் அகவரலாறு. இந்த வரலாற்றுணர்வுதான் இந்தியா என்பது. அது இங்கே இருந்துகொண்டுதான் இருந்தது, என்றும் எப்போதும். அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆசேது ஹிமாசலம் என் அதன் எல்லை குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெற்கத்தியர்கள் எல்லாரையும் இமயமும் கங்கையும் தங்களது என உணரச்செய்கிறது. வடக்கத்தியர்களை ராமேஸ்வரமும் குமரியும் தங்கள் புனிதமண்ணாக எண்ணச்செய்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழிலக்கியத்தின் மிகமிகத் தொன்மையான பகுதி என்பது புறநாநூற்றின் முதல் பதினாறு பாடல்கள்தான். அவற்றின் மொழியே அதற்குச்சான்று. அந்தப்பாடல்களிலேயே இந்தியநிலம் வந்துவிடுகிறது.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும். (புறம் – 6)

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடிய பாடல் இது. ஒருவேளை புறநாநூற்றின் மிகத்தொன்மையான பாடல் இதுவாக இருக்கலாம். இங்கே வழக்கே உள்ள மலை பனிபடந்த பெரிய மலை என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது.

அந்த நிலம்தான் நம்முள் நம் தன்னுணர்வாக இருந்துகொண்டிருக்கிறது. நம் வரலாற்றுணர்வாக வெளிப்படுகிறது. ஆலமர விதைக்குள் உள்ள ஆலமரம் போல. சாந்தோக்ய உபநிடதத்தின் உவமை அது. அந்த விதைக்குள் நுண்வடிவில் உள்ளது ஆலமரம். கண்ணால் காணமுடியாது. ஆனால் மண்கிடைத்தால் முளைக்கும்.

நண்பர்களே, வரலாறு எங்கிருக்கிறது? உங்களுக்குள் எனக்குள் எல்லாம் உள்ளது நம் வரலாறு. அதை முளைக்கவைக்கும் நிலம் என வெள்ளையர் நமக்குச் சொன்ன வரலாற்று ஆய்வுமுறையைச் சொல்லலாம்.

*

நண்பர்களே, அடுத்து நாம் எப்போதுமே எதிர்கொள்ளும் வினா ஒன்றுண்டு. இந்தியச் சுதந்திரம் நமக்கு என்ன அளித்தது? ஆங்கில ஆட்சியில்தானே ரயில்பாதை போடப்பட்டது? ஆங்கில ஆட்சியில்தானே சாலைகள் போடப்பட்டன? நீதிமன்றம் வந்தது? ஆங்கில ஆட்சியில்தானே பொதுக்கல்வி அறிமுகம் பண்ணப்பட்ட்து?

நாபுரளாமல் சொல்வார்கள். ’வெள்ளையன் போய் கொள்ளையன் தானே வந்தான்?’ நம்மவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம். கருத்து முக்கியம் அல்ல. அடுக்குமொழியில் சொல்லப்பட்டால் அது உண்மை. வெள்ளை கொள்ளை சரிதான்…

நண்பர்களே, 1750 வாக்கில்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி வேரூன்றுகிறது. 1770களில் உலகம் அன்றுவரை கண்டிராத மாபெரும் பஞ்சம் ஒன்று இந்தியாவை ஆக்ரமித்தது. மாபெரும் பஞ்சம் . இந்திய மக்கள்தொகையின் நாலில் ஒரு பங்கினர் பட்டினிகிடந்து செத்துப்போனார்கள். ஆம், கிட்டத்தட்ட இரண்டுகோடி மக்கள். பசித்து துடித்து செத்துக்குவிந்தார்கள். இரண்டுகோடிப்பிணங்கள். குவித்துப்போட்டால் இந்த திருப்பூரைவிட அதிகமாக இருக்கும்….பதினைந்துநாள் ஒருவாய் கஞ்சி கூட இல்லாமல் கிடந்தால்தான் ஒரு மனிதன் சாவான். பத்தாம்நாள் ஒருவாய் கஞ்சி கிடைத்தால் பிழைத்துக்கொள்வான்….அப்படியென்றால் எப்படிப்பட்ட பஞ்சம்!

அந்தப்பஞ்சம் வந்தபின் நுறாண்டுகளில் பதிமூன்று சிறிய பஞ்சங்கள். அதன்பின் மீண்டும் 1885 வாக்கில் இன்னொரு மாபெரும். அந்தப்பஞ்சத்தில் 7 கோடிப்பேர் செத்துப்போனார்கள் என்று ஆங்கில அரசுக்கணக்குகள் சொல்கின்றன. தக்காணத்தில், அதவாது தமிழகத்தை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் மட்டும் இரண்டுகோடி பேர். கோவை நகரில் ஒரு நாளுக்கு இருபதாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இந்தப் பஞ்சங்கள் இய்ற்கையாக வரவில்லை. இன்று அன்றைய பிரிட்டிஷ் ஆவணங்களை தீர ஆராய்ந்து பலர் எழுதிவிட்டனர். அமர்த்யா சென் முதல் பலர் எழுதியிருக்கிறார்கள். நாம் எழுதியதை விட விரிவாக ஆங்கிலேயர் எழுதியிருக்கிறார்கள். தமிழில் சங்கீதா ஸ்ரீஇராம் விரிவாக எழுதியிருக்கிறார்

நான் ஓர் ஆங்கில ஆசிரியரின் நூலை அறிமுகம்செய்திருக்கிறேன். இந்தியாவின் மாபெரும் வேலி. ராய் மாக்ஸ்ஹாம் எழுதிய நூல். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியவில் காலூன்றிய ஆரம்பநாட்களில் 1750களில் வட இந்தியாவில் தேசத்துக்கு நெடுக்குவாட்டில் ஒரு பெரும் வேலியை கட்டினார்கள். உலகில்யே நீளமான வேலி அதுதான். ஒரிசா முதல் காஷ்மீர் வரை அந்த வேலி இருந்தது

அன்று வட இந்தியாவுக்குச் செல்லவேண்டிய உப்பு முழுக்க குஜராத்தில் இருந்தும் ஒரிசாவில் இருந்தும்தான் சாலைவழியாகச் சென்றது. அந்த உப்பின் மீது வரி போட்டு பணம் வசூலிக்க வெள்ளையன் கண்டுபிடித்த வழி அது. அந்தவேலிதான் பஞ்சத்தில் கோடிக்கணக்கானவர்களை காவுகொண்டது என்கிறார் ராய் மாக்ஸ்ஹாம் .ஆம், அது பஞ்சம் அல்ல. செயற்கைப்பஞ்சம். பஞ்சச்சாவு அல்ல கூட்டக்கொலை!

இந்தியாவில் எப்போதுமே வரட்சி உண்டு. நூற்றாண்டுகளாகவே மழைபொய்த்து வரும் வரலாறு நமக்குண்டு. மழை பொய்க்கும்போது நாம் பஞ்சம்பிழைக்கச்செல்வோம். இந்தியாவின் மேற்குப்பாதியில் நல்ல விளைச்சலிருந்தால் கிழக்குப்பாதியில் மழை இருக்காது. இங்கே ம்ழை இருந்தால் அங்கே இருக்காது. இதுதான் இங்குள்ள இயற்கை. மக்கள் மழை இல்லாவிட்டால் மறுபாதிக்கு கிராமங்களையே காலிசெய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இஸ்லாமிய ஆவணங்களில் அப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து ஊர்கலும் நகரங்களும் காலியாகக் கிடப்பதைப்பற்றிய வரிவசூலதிகாரிகளின் குறிப்புகள் பல உள்ளன.

ஆனால் இந்த உப்புவேலி அந்த இடப்பெயர்வை தடுத்துவிட்டது. பஞ்சம் இருந்த இடங்களுக்கு தானியம் செல்வதையும் அது தடுத்துவிட்டது. தஞ்சைக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவே ஒரு பெரிய மதில்கட்டினால் என்ன ஆகும்? அதுதான் நடந்தது

இரண்டாவது பெரும் பஞ்சம் வந்ததற்குக்காரணம் ரயில்பாதைகள்தான். அவ்வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. மொத்த தானியத்தையும் வெள்ளையர் ரயில்பாதைகள் வழியாக துறைமுகத்துக்கு திரட்டிக்கொண்டு சென்று ஏற்றுமதி செய்தார்கள். உலகமெங்கும் போரிட்டுக்கொண்டிருந்த தங்கள் ராணுவத்துக்கு அந்த உணவை அளித்தார்கள்

பஞ்சத்தில் மக்கள் கோடிக்கணக்காகச் சாகும்போது துறைமுகங்களில் உணவு மலைமலையாகக் குவிந்துகிடந்தது. ஆறுமாதம் உணவு ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தினால்போதும் பஞ்சத்தைத் தடுத்துவிடலாம் என பிரிட்டிஷ் மனிதாபிமானிகளே கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். ஆதிக்க அரசு செவிசாய்க்கல்வில்லை.

அந்த பெரும்பஞ்சத்தில் சென்னையை ஆட்சி செய்வ்ர் பக்கிங்ஹாம் பிரபு. அவர் இங்கே பணம் சேர்ப்பதற்காகவே அனுப்பப்பட்டவர். அவரது குடும்பம் நொடித்துப்போயிருந்தது. அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்ததனால் அவரை பணம் நிறையக்கொட்டும் இடமான சென்னைக்கு அனுப்பினார்கள். நண்பர்களே அக்கால சென்னை வெள்ளை கவர்னர்கள் அடித்த கொள்ளையை இன்றைய மதிப்புப்படி பார்த்தால் 2ஜி எல்லாம் சும்மா பொரிகடலை மாதிரி.

பக்கிங்க்ஹாம் பஞ்சத்தைப்பணமாக்கினார். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான கூலிகளை கப்பலில் ஏற்றி கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே கரீபியன் தீவு வரை, மலேசியா இலங்கை ஆப்ரிக்கா என கொண்டு சென்று அடிமைவேலை வாங்கினார்கள் வெள்ளையர். அப்படிக் கொண்டுசெல்பவர்களில் பத்தில் ஒருவரே தேறுவார்கள், மிச்சபேர் நோயிலும் குளிரிலும் மடிவார்கள். ஆகவே பத்து மடங்கு ஆட்களைக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. அதனா இங்கே பஞ்சம் குறையக்கூடாது என ஆசைப்பட்டனர் வெள்ளை நில உடைமையாளர்கள். பஞ்சத்தை குறைக்காமலிருக்க அரசுக்கு கப்பலுக்கு இவ்வளவு என்ற கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தனர்.

கடைசியாக பக்கிங்காம் கண்டுபிடித்த வழிதான் பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைமுதல் விசாகப்பட்டினம் வரை ஒரு தரைவழிக் கடல்பாதை. பக்கத்தில்தான் கடல் இருக்கிறது. இந்தப்பாதை அவசியமே இல்லை. ஆனால் கோடிக்கணக்கான மக்களை ஒருவேளை கஞ்சி மட்டும் கொடுத்து வேலைவாங்கி அதைக் வெட்டினார்கள். கூலி இல்லை. கூலி முழுக்க செலவாகக் காட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்தக்கால்வாய் சில வருடங்கள் கூட பயன்படவும் இல்லை.

அக்காலகட்டத்தில் பஞ்சத்தைப்பற்றிச் சொன்னபோது ஒரு பிரிட்டிஷ் அமைச்சர் சொன்னார், ’முதல் பஞ்சத்தில் மூன்றுகோடிப்பேர் செத்தார்கள். அப்படியென்றால் இரண்டாவது பஞ்சத்தில் எப்படி ஏழுகோடிப்பேர் சாகமுடிந்தது? இந்தியர்கள் எலிகளைப்ப்போல. குட்டிபோட்டு பெருகுவார்கள் அவர்கள்’

1947ல் நாம் சுதந்திரம் பெற்றோம். கஜானா காலியான அரசை நேரு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அப்போதும் பெரும் பஞ்சங்கள் தொடர்ந்தன. பிகாரும் உத்தரப்பிரதேசமும் உணவில்லாமல் தவித்தன. இங்கிருக்கும் சில முதியோர் அந்தப்பெரும் பஞ்சத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதில் ஒருவர், ஒரே ஒருவர்கூட சாகாமல் இந்திய அரசு கவனித்துக்கொண்டது. அதற்குப்பொறுப்பேற்றவர் இருவர். நேரு. இன்னொருவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். நேருவின் அரசு பஞ்ச நிவாரணத்துக்காக களத்தில் நின்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மகத்தான கஞ்சித்தொட்டி இயக்கம் கிராமம் கிராமமாக மக்களுக்கு உணவூட்டி காத்தது.

கலிஃபோர்னியாவில் பெர்க்லி பல்கலையில் ஒரு இந்திய நூல்பகுதி உள்ளது. அங்கே நேருவின் ஒரு கடிதத்தைக் கண்டேன். 1950களின் பஞ்சத்தில் நேரு எழுதிய கடிதம் அது. அந்தப்பஞ்சத்தைச் சமாளிக்க நேரு அன்று உலகிலிருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் கடிதமெழுதினார். காலில் விழுந்து கெஞ்சி மன்றாடினார். உங்களிடம் என் நாட்டு மக்களுக்காக பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகிறேன் என எல்லா சுயமரியாதையையும் இழந்து கெஞ்சினார். அதிக நிதியுதவிசெய்தது அமெரிக்க தேசம். அதில் மிக அதிக உதவிசெய்தது கலிஃபோர்னியா மாநிலம்.

கலிஃபோர்னிய மாநிலத்துக்கு நன்றி தெரிவிக்கும் நேரு அவர்கள் செய்த உதவியை திருப்பிச்செய்ய முடியாது, நன்றிக்கடனாக சில புத்தகங்கள் அனுப்புவதாகச் சொல்லி எழுதிய கடிதம் அது. என்னை கூட்டிவந்த நண்பர் என்னை விட்டுச்சென்றுவிட்டார். அங்கே அறிமுகமான ஒரு நண்பர்தான் அதைக்கொண்டுசென்று காட்டினார். அவர் கணீப்பொறித்துறை ஊழியர். ‘பாத்தீங்களா சார் எப்டி கேவலப்படுத்துறானுங்கன்னு’ என்றார் அவர்.

‘எனக்கு பெருமிதமாக இருக்கிறது. தனக்காக நேரு கையெந்தவில்லை, தன் மக்களுக்காக கையேந்தினார் அந்தப்பெரிய மனிதர். அப்படி ஒரு தலைவனை அடைந்திருந்தோம், அதற்கான தகுதி நமக்கிருந்தது என நான் விம்மிதம் கொள்கிறேன்’ என்று சொன்னேன்.

ஆம் நண்பர்களே, தேசவிடுதலையால் நாம் என்ன பெற்றோம்? ஆதிக்கவாதியின் அலட்சியத்திற்கும் நமது தலைவனின் பெருங்கருணைக்கும் ஒரு வித்தியாசம் உள்ளதே அதைப்பெற்றோம். இங்கே வந்தேமாதரம் பாடப்பட்டபோது நான் கண்ணீர் மல்கினேன். எவ்வளவுபெரிய கனவு! அந்தக்கனவை நமக்கு அளித்தனர் நம் தேசமுன்னோடிகள். ஜனநாயகம், சமத்துவம், தன்னிறைவுக்குச் செல்வதற்கான சுதந்திரத்தை நமக்களித்தனர்.

அந்தக்கனவை நாம் இழந்தோமென்றால் அதற்குப்பொறுப்பு நாமே. அதை இத்தருணத்தில் நினைத்துக்கொள்வோம். நம் சிறுமைக்கு, நம் செயலின்மைக்கு, நம் நேர்மைக்குறைவுக்கு நம் மூதாதையரை பொறுப்பாக்கும் அற்பத்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான நாளாக இந்த தினத்தை கொள்வோம்

வணக்கம்.

.


[15-8-2013 அன்று திருப்பூர் அறம் அறக்கட்டளையின் சுதந்திரதினவிழாவில் ஆற்றிய நிறைவுரையின் எழுத்துவடிவ முன்வடிவம். 8-8-2013 ல் ஈரோட்டில் இதன் முதல் வடிவம் பேசப்பட்டது;  முழுமையாக்கப்படவில்லை]


நன்றி: ஜெயமோகன் இணையதளம்

காண்க:   அறம் அறக்கட்டளை விருதுகள்