செவ்வாய், 15 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி

 
எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஒரு குழந்தைக்கு எழுத்தறிவிக்கிறார்

விஜயதசமியன்று (14.10.2013) திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் அறம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல் விழா நடைபெற்றது. இதில் 170 குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  'ஆழிசூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,  சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ’ஈ.வெ,ரா.வின் மறுபக்கம்’ நூலை எழுதிய ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைத்தனர்.

இது தொடர்பான தினமணியில் வெளியான செய்தி கீழே.

(படத்தை சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்)

கல்வியே மிகப்பெரும் செல்வம்:
பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்

திருப்பூர், அக். 14: கல்வியே மிகப்பெரும் செல்வம் என்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் விழாவில் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் திங்கள்கிழமை பேசினார்.

  திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் விழா (வித்யாரம்பம்) விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் நடைபெற்றது.

  விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதைத் துவங்குவது நமது மரபு. அதிலும் கல்வித்துறையில் தேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் மூலமாக  குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி கல்வியைத் துவங்கிவைக்கும் பணியை அறம் அறக்கட்டளையினர் இரண்டாவது ஆண்டாக திங்கள்கிழமை திருப்பூரில் நடத்தினர்.

 இந்த எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி காலை 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் எஸ்.என்.நடராஜ் குருக்கள் இதை துவக்கி வைத்தார்.

 இதில், 'ஆழி சூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், 
சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்தனர். மொத்தம் 170 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் செய்து வைக்கப்பட்டது.


  இதில், சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசியது:

உலகில் பிற நாடுகள் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே இந்தியாவில் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. வானவியல், தத்துவம், அரசியல் என அனைத்துவிதமான நிலைகளிலும் கல்வி போதிக்கப்பட்டுவந்தது.

   விஜயதசமிநாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் என்பது நமது பாரம்பரியமாகும். கல்விதான் மிகப்பெரும் சொத்து. எழுத்தறிவித்தல் செய்து வைக்கப்பட்ட குழந்தைகள் வருங்காலத்தில் கல்வியில் ஆராய்ச்சி பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றார்.

  இதில், அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன், செயலாளர் கு.சிவகுமார், ஹரிபிரசாத், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக