திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சுதந்திர தினத் திருவிழா- 2015 சிறு தொகுப்பு


சமூகசேவகர் கூத்தம்பாக்கம் இளங்கோவுக்கு

அறச்செம்மல்-2015 விருது வழங்கியது 

அறம் அறக்கட்டளை

.

திருப்பூரில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில்,  சமூகசேவகர் கூத்தம்பாக்கம் ஆர்.இளங்கோவுக்கு 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருதை வழங்குகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். உடன் (வலமிருந்து) அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், இயற்கை ஆர்வலர் அம்மாபாளையம் வேலுசாமி ஆகியோர்.

.
திருப்பூர், ஆக. 17: கூத்தம்பாக்கம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்கிய சமூகசேவகர் திரு. ஆர்.இளங்கோவுக்கு திருப்பூர் அறம் அறக்கட்டளை, 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருதை வழங்கியது. இவ்விருது அறம் அறக்கட்டளை நடத்திய நான்காம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது. 

திருப்பூரில் இயங்கும் அறக்கட்டளை அமைப்பு ஆண்டுதோறும் அறச்செம்மல் விருதினை சுதந்திரதின விழாவில் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நான்காம் ஆண்டாக, அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தின விழா, சனி, ஞாயிறு (ஆகஸ்ட் 15, 16) இரண்டு நாட்கள் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. 

ஆக. 15, சனிக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்ற தேசியக் கொடியேற்றும் நிகழ்வுக்கு காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் திரு. ஓ.கே.டெக்ஸ் எம்.கந்தசாமி தலைமை வகித்தார். மகாகவி வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
.
கலாம் குறித்த கருத்தரங்கில் பேசுகிறார் எம்.ஹரிஹரசுதன் (அதிமுக).
.
அதைத் தொடர்ந்து  ‘கலாமின் கனவுகள் என்ற தலைப்பில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் பேசினர். ஜேசிஸ் அமைப்பின் தலைவர் திரு. என்.சம்பத்குமார் தலைமை வகித்தார். திருவாளர்கள் எம்.ஹரிஹரசுதன் (அதிமுக), பா.சசிகுமார் (மதிமுக), வழக்கறிஞர் எம்.ராமகிருஷ்ணன், எஸ்.சுந்தரபாண்டியன் (ஆம் ஆத்மி), அ.பார்த்திபன் (பாஜக), மு.சுரேஷ்பாபு (காந்திய மக்கள் இயக்கம்) ஆகியோர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவுகளுடன் தங்கள் கனவுகளை விவரித்தனர். 
 .
கலாம் குறித்த கருத்தரங்கில் நிறைவுரையாற்றுகிறார் பேரா. இரா.ஸ்ரீனிவாசன்.

.
இறுதியில், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளர் திரு. இரா.ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,  “ஒரு நாடு வல்லரசாக, பொருளாதாரத்தில் வலுவாக வேண்டும். அதற்கு இயற்கை வளம், மக்கள் வளம், கலாசார வளம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகள்” என்று கலாம் கூறியதை நினைவுகூர்ந்தார். 
 .
களப்பணியாளர் அறிமுகத்தில் பேசுகிறார் காடையூரில் கொங்க கோசாலையை நடத்திவரும் விஜயாபுரம் வி.சிவகுமார்.
.
மாலை நடைபெற்ற களப்பணியாளர் அறிமுக நிகழ்ச்சியில் அம்மாபாளையத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வேலுசாமியும், காடையூரில் கொங்க கோசாலையை நடத்திவரும் வி.சிவகுமாரும் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுள் முதியவர் திரு.வேலுசாமி தனது 77 வயதிலும், ம்ரங்களை நட்டு வளர்ப்பதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அதேபோல, அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றிய விஜயாபுரம் இளைஞர் திரு.வி.சிவகுமார் நாட்டுப்பசு இனத்தைக் காப்பதற்காக தனது தொழிலைக் கைவிட்டு காடையூரில் கொங்க கோசாலையை நடத்தி வருகிறார். 
.
விவேகானந்தா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி.
.
அடுத்து கே.செட்டிபாளையம் விவேகானந்த வித்யாலயா, ஆஷர் நகர் வித்யாமந்திர் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 .
ஏற்புரை வழங்குகிறார் ’அறச்செம்மல்’ கூத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ.
.
முதல்நாள் நிகழ்வுகளின் நிறைவாக, நிறைவாக, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தை தமிழகத்தின் முன்மாதிரி கிராமமாக உருவாக்கியவரும், மேலும் பல கிராமங்கள் முன்னேற்ற வழிகாட்டி வருபவருமான சமூகசேவகர் திரு. ஆர்.இளங்கோவுக்கு 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதனை சாஹித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸ் வழங்கி, சுதந்திர தினச் சிறப்புரையாற்றினார்.
 .
சுதந்திர தின சிறப்புரையாற்றுகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
 .
“சுதந்திரம் என்பது கட்டுப்பாட்டுக்கு உள்பட்டது. நாம் ஒவ்வொருவரும் தேசத்தின் பெருமையை உணர்ந்து அதன் பிள்ளைகள் நாம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்’’ என்று தனது சிறப்புரையில் எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸ் குறிப்பிட்டார்.
 .
இரண்டாம் நாள் நிகழ்வு:
.
ஆக. 16, ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் துவங்கின. சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
 .
என்.ஸ்ரீராம் தலைமையிலான குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி
 .
மாலை 3.00 மணியளவில், சங்கீத கலாபீடம் நிறுவனர் திரு. என்.ஸ்ரீராம் தலைமையிலான குழுவினரின் தேசபக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாளர்கள் சுதர்சன், தஞ்ஜெயன், ராகுல், தேவஸ்ரீ ஆகியோர் அடங்கிய இக்குழு அற்புதமான தேசபக்திப் பாடல்களை வழங்கியது.
.
அம்பேத்கர் குறித்துப் பேசுகிறார் எழுத்தாளர் ம.வெங்கடேசன்
 .
அதைத் தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் 125-வது ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.ம.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார். சிபிசி ஃபேஷன்ஸ் உரிமையாளர் திரு. விஜயகுமார் தலைமை வகித்தார். திரு.ம.வெங்கடேசன் தனது உரையில், “விடுதலைப்போரில் நேரடியாகப் பங்கேற்காதபோதும், டாக்டர் அம்பேத்கர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடினார். அவரது முயற்சியால் உருவான சட்டங்களின் பலனையே நாம் இப்போது அனுபவிக்கிறோம்’’ என்றார். 
.
பேரா.தா.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்

 .
இறுதியாக, பேராசிரியர் திரு. நாகர்கோவில் தா.ராஜாராம் தலைமையில், ‘தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வியா? பொதுநல உணர்வா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  ‘கல்வியே’ அணியில், ராஜபாளையம் ஆசிரியர் திரு.ஆர்.ராஜ்குமார் (அணித் தலைவர்), சென்னிமலை தமிழாசிரியர் திரு. என்.சரவணன், திருப்பூர் மகாகவி வித்யாலயா பள்ளி தாளாளர் திரு. மணி ஆகியோர் பேசினர். ’பொதுநல உணர்வே’ என்ற அணியில் திருவில்லிப்புத்தூர் திருமதி இந்திரா ஜெயச்சந்திரன் (அணித் தலைவர்), வழக்கறிஞர் திரு. அ.பார்த்திபன், திரு. ஜேசி மு.சுரேஷ்பாபு ஆகியோர் பேசினர். இறுதியில் நடுவர்  ‘தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வியே’ என்று தீர்ப்பளித்தார்.
 .
திருப்பூர், குமரன் சாலையிலுள்ள குமரன் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் எழுத்தாளர்கள் ஜோ டி குரூஸ், ம.வெங்கடேசன்.
 .
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், நிர்வாகிகள் சிவகுமார், சுரேஷ்பாபு, உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

.

தினமலர் செய்தி- ஜோ உடன் கலந்துரையாடல்

 

தனிமனித ஒழுக்கமே இன்றைய தேவை: எழுத்தாளர் ஜோ டி குரூஸ் 'பளிச்'

.

திருப்பூர் அறம் அறக்கட்டளை சதந்திர தின கலந்துரையாடலில் குரூஸ்...!
 .
திருப்பூர், ஆக. 17: ''தனிமனித ஒழுக்கமே, இன்றைய சமுதாயத்தின் அடிப்படை தேவை. ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்திக் கொள்வதே சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்,'' என, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அறிவுறுத்தினார்.

சுதந்திர தினவிழாவையொட்டி, திருப்பூர் டவுன்ஹாலில் 'மக்களுடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சி, நேற்று நடந்தது; சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பங்கேற்றார். வாசகர்களின் கேள்விகளுக்கு, அவர் பதிலளித்தார்.

பிராணிகளை கொல்வது, அடிமாடுகளை இறைச்சிக்காக விற்பது சரியா?

வணிக நோக்கத்தில், இதுபோன்ற தவறுகள் தொடர்கின்றன. மனிதர்களில் நல்லவர்கள் சதவீதம் அதிகமா, கெட்டவர்கள் சதவீதம் அதிகமா என்றால், நல்லவர்கள் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. நல்லவர்களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

தேசியத்தை எதிர்ப்பவர்களை முற்போக்குவாதிகள் என கூறுவது அதிகரித்துள்ளதே?

இச்சமுதாயத்தில், பல்வேறு விதமான மனிதர்களை பார்க்கிறோம்; பழகுகிறோம். அடிப்படை கட்டமைப்பில், அவர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக இருக்கலாம்.அவர்களுடன் வாழ்வதற்காக நாம் பொறுமைசாலிகளாக, பெருந்தன்மை கொண்டவர்களாக மாற வேண்டியிருக்கிறது. தனிமனித ஒழுக்கமே, இன்றைய சமுதாயத்தின் அடிப்படை தேவை. ஒவ்வொரு மனிதனும், தன்னை திருத்திக் கொள்வதே, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.

மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, கடலோர எல்லை பாதுகாப்பில் பணி தர வேண்டும் என கூறி வருகிறீர்களே...?

கடலுக்குள் இருந்துவிட்டு, கரைக்கு ஓய்வெடுக்க வரும் மீனவர்களுக்கு, நாட்டுக்குள் நடப்பது தெரிவதில்லை. அரசியல், சமூகம், திட்டங்கள், அதனால் ஏற்படும் பாதிப்பு அறிவதில்லை. மீனவர்களின் இருப்பை, வாழ்வை, விழுமியங்களை, வரலாறை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட மனிதர்கள் அல்ல; இம்மண்ணுக்கு சொந்தக்காரர்கள். மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள், கடலில் அடிப்படை வாழ்வை புரிந்தவர்கள். அவர்களில் படித்தவர்களுக்கு அது சார்ந்த பணி தர அரசு முன்வர வேண்டும்.

தனிமனித ஒழுக்கத்தை கட்டாயப்படுத்தும் அளவுக்கு, சமூகம் மோசமாகி விட்டதா?

தனிமனித ஒழுக்கம் கனவாகி விட்டது; 125 கோடி மக்களும், ஒழுக்கத்தை கேடயமாக எடுக்க வேண்டும். இதை செய்தியாக ஏற்கக்கூட மக்கள் தயாராக இல்லை. கெட்டவனாக நிரூபிக்க ஒரு விநாடி போதும்; நல்லவன் என நிரூபிக்க, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்ட வேண்டியிருக்கிறது.

எழுத்தாளனுக்கு வரைமுறை அவசியமா?

எழுத்தில் உண்மை இருக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அன்பு இருக்க வேண்டும். அக்கறை, அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். எழுத்தும், எண்ணமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

புத்தகங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து?

புத்தகத்தின் ஒரு வரியாவது, மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சில புத்தகங்கள் கோபப்படுத்தும்; சில புத்தகங்கள் விவேகி ஆக்கும். சில புத்தகங்கள் விரல் பிடித்து துாக்கி விடும். ஒரே வரி, வாழ்க்கை மந்திரத்தை சொல்லி தரும்.

இவ்வாறு, ஜோ டி குரூஸ் பேசினார்.

நன்றி: தினமலர்- திருப்பூர் (17.08.2015)

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சுதந்திர தினத் திருவிழா - 2015 அழைப்பிதழ்

திருப்பூரில் அறம் அறக்கட்டளை சுதந்திர தினத் திருவிழாவை ஆகஸ்ட் 15- 16 ஆகிய 2 நாட்கள் நடத்துக்கிறது. அதன் முழு விவரமும் அழைப்பிதழ் வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

வாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்!
வாருங்கள் திருப்பூரை மேம்படுத்துவோம்!


கலாம் குறித்த கட்டுரைப் போட்டி- 2015

சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, அறம் அறக்கட்டளை திருப்பூர் வட்டார கல்லூரி மாணவர்களுக்காக ’காலமின் கனவுகள்’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியை நடத்துகிறது.

அதன் விவரம் கீழே...

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்.

புதன், 5 ஆகஸ்ட், 2015

2013-இல் அறச்செம்மல் விருது பெற்றோர்...

அறம் அறக்கட்டளை, திருப்பூரில் 2013-இல் நடத்திய சுதந்திரதினத் திருவிழாவில், ஆறு சமூக சேவகர்களுக்கு அறச்செம்மல் விருது வழங்கப்பட்டது. விருதுகளை பிரபல எழுத்தாளர் திரு. ஜெயமோகன் வழங்கினார்.

விருது பெற்றோர் விவரம்:


1. காந்தியவாதி திரு. சசிபெருமாள்,
     மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, சேலம்.

2. மருத்துவர் திரு. செ.சதீஷ்குமார் – ஹேமா சதீஷ்குமார் தம்பதி,
      ஏகல் வித்யா கேந்திரம் -கோவை.

3. மருத்துவர் திரு. R.சுநீல்கிருஷ்ணன்,
     காந்தி இன்று- இணையதள நிர்வாகி, காரைக்குடி.

4. திரு. K.செந்தில்நாதன்,
    
விவேகானந்தா சேவாலயம், திருப்பூர்.

5. திரு. G.சசிதரன்,
     பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு, சென்னை.

6. திரு. P.மகேந்திரன்,
    ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை.

விருது வழங்கும் நிஅழ்வின் நிழற்படப் பதிவுகள் கீழே...

விருது பெறுகிறார் மதுவுக்கு எதிரான போராளியான சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள்
விருது பெறுகின்றனர், ஏகல் வித்யா கேந்திரத்தைச் சேர்ந்த கோவை மருத்துவர் திரு. செ.சதீஷ்குமார் – ஹேமா சதீஷ்குமார் தம்பதி
விருது பெறுகிறார் காந்தி இன்று இணையதள நிர்வாகியான காரைக்குடி மருத்துவர் சுநீல்கிருஷ்ணன்
விருது பெறுகிறார் திருப்பூர் விவேகானந்த சேவாலய நிர்வாகி செந்தில்நாதன்

விருது பெறுகிறார் சென்னையைச் சேர்ந்த பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி சசிதரன்


விருது பெறுகிறார் கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன்